பெல்ஜியம் பாலியல் தொழிலாளர்கள் போராட்டம் pt web
உலகம்

பாலியல் தொழிலாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு, ஓய்வூதியம்.. வரலாற்றில் இடம்பிடித்த பெல்ஜியம்!

மகப்பேறு விடுப்பு, ஓய்வூதியம், சுகாதார காப்பீடுகள், நோய்வாய்ப்பட்ட நாளில் விடுமுறை போன்ற மற்ற ஊழியர்களைப் போல் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த உலகின் முதல் நாடாக பெல்ஜியம் மாறியுள்ளது.

Angeshwar G

புதிய சட்டத்தினை கொண்டு வந்த பெல்ஜியம்

மகப்பேறு விடுப்பு, ஓய்வூதியம், சுகாதார காப்பீடுகள், நோய்வாய்ப்பட்ட நாளில் விடுமுறை போன்ற மற்ற ஊழியர்களைப் போல் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த உலகின் முதல் நாடாக பெல்ஜியம் மாறியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் தொழில் குற்றமற்றதாக அறிவிக்கப்பட்டப் பின், கடந்த மே மாதத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 3 ஆம் தேதி கொண்டு வரப்பட்டிருந்த சட்டத்திற்கு பெல்ஜிய பாராளுமன்றத்தில் 93 பேர் ஆதரவாக வாக்கினை செலுத்தி இருந்தனர். 33 பேர் தங்களது வாக்கையே பதிவு செய்யாமல் இருந்தனர். இந்த சட்டத்திற்கு எதிராக யாரும் வாக்கு செலுத்தாத நிலையில், இச்சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அப்போது ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், இன்றுமுதல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

சட்டம் சொல்வது என்ன?

பெல்ஜியத்தில், 2022 ஆம் ஆண்டில், குறிப்பாக கோவிட் தொற்றுக்காலங்களில் அரசின் ஆதரவு பாலியல் தொழிலாளர்களுக்கு இல்லாததால், முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டம், மகப்பேறு விடுப்பு, ஓய்வூதியம், சுகாதார காப்பீடுகள், நோய்வாய்ப்பட்ட நாளில் விடுமுறை என மற்ற வேலைகளில் ஊழியர்கள் பெறும் உரிமைகள் பாலியல் தொழிலாளர்களுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்தும்.

இந்த சட்டம் தொழிலாளர்களுக்கு சில உரிமைகளையும், அவர்களது முதலாளிகளுக்கு சில நிபந்தனைகளையும் விதிக்கிறது. ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் முறித்துக் கொள்ளும் உரிமையும், வாடிக்கையாளரை மறுக்கும் உரிமையும், வேறு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் உரிமையையும் இந்த சட்டம் பாலியல் தொழிலாளர்களுக்கு வழங்குகிறது. அறைகளில் எச்சரிக்கை சுவிட்ச்களை பொருத்த வேண்டும் என்றும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது. இந்த சட்டம் பாலியல் திரைப்படங்களில் நடிப்பவர்களுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நாடும் இதை நோக்கி நகர வேண்டும்

பாலியல் தொழிலாளர்கள் மற்ற தொழில்களில் உள்ள அதே பாதுகாப்புகளுக்கு உரிமையுடையவர்கள் என்பதை உறுதி செய்யும் விதமாக பெல்ஜியத்தில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக்கியமாக மற்ற வேலைகளையும் தொழிலாளர்களையும் போலவே, பாலியல் தொழில்களும் தொழிலாளர்களும் பார்க்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரித்து கொண்டுவரப்பட்ட முதல் சட்டம் இது என்பதும், முதல் நாடு பெல்ஜியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த 2003 ஆம் ஆண்டு Prostitution Reform Act எனும் சட்டத்தினை நியூசிலாந்து கொண்டு வந்ததது. இதன் மூலம், பாலியல் தொழில்களை குற்றமற்றதாக மாற்றிய முதல் நாடு எனும் பெருமையை நியூசிலாந்து பெற்றிருந்தது.

பாலியல் தொழில் குற்றமற்றதாக அறிவிக்கப்பட்ட 2022ல் இருந்து தற்போது வரை, அந்நாட்டில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் பாலியல் தொழிலாளர்களாக இருப்பதாக மெட்ரோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சட்டம் தொடர்பாக பிபிசி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆராய்ச்சியாளர் எரின் கில்பிரைட் இதை, இதுவரை உலககெங்கிலும் காணாத சிறந்த முன்னெடுப்பு என்றும் ஒவ்வொரு நாடும் இந்த திசையை நோக்கி நகர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் பாதுகாப்பானவர்களாக மாற்றுகிறது

பெல்ஜிய பாலியல் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான விக்டோரியா இந்த சட்டம் தொடர்பாக கூறுகையில், “இந்த சட்டம் இல்லையென்றால், இந்த வேலை சட்டவிரோதமானது என்றால் பாலியல் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான எந்த நெறிமுறைகளும் இல்லை. இந்த சட்டம் பாலியல் தொழிலாளர்களை பாதுகாப்பானவர்களாக மாற்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Victoria

இந்த சட்டம் குறித்தான எதிர்மறை விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஜூலியா க்ரூமியர், பாலியல் வேலையே பெண்களை சுரண்டுவதுதான் என தெரிவித்துள்ளார்.