முகமது யூனுஸ், டொனால்டு ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

பிப்.9 US உடன் வணிக ஒப்பந்தம் | தேர்தலுக்கு முன்பே அவசரம் காட்டும் வங்கதேசம்.. வீசும் புயல்!

வங்காளதேச பொதுத் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு (பிப்.12) முன்பாக, பிப்ரவரி 9ஆம் தேதி அமெரிக்கா-வங்காளதேச வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Prakash J

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கதேசத்தின் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஆகஸ்ட் 2025இல், அது 20% ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில், வங்காளதேச பொதுத் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு (பிப்.12) முன்பாக, பிப்ரவரி 9ஆம் தேதி அமெரிக்கா-வங்காளதேச வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், ட்ரம்பின் அரசாங்கம் 100 நாடுகளுக்குப் புதிய வரியை விதித்தது. இந்தியாவிற்கும் இறக்குமதி வரியாக 25 சதவீதமும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக மேலும் 25 சதவீத வரியும் என மொத்தம் 50 சதவீதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், பல சுற்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது இந்தியாவுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது, அண்டைநாடுகளான சீனா, பாகிஸ்தான், வங்கதேசத்தைவிடக் குறைவாக உள்ளது. இதற்கிடையே, வங்கதேசத்திற்கும் கடந்த ஆண்டு புதிய வரி விதிப்பின் தொடக்கத்தில் 37% விதிக்கப்பட்டது. பின்னர், அது, 35% ஆகக் குறைக்கப்பட்டது. பின்னர் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஆகஸ்ட் 2025இல், அது 20% ஆக நிர்ணயிக்கப்பட்டது.

யூனுஸ், ட்ரம்ப்

இந்தச் சூழலில், வங்காளதேச பொதுத் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு (பிப்.12) முன்பாக, பிப்ரவரி 9ஆம் தேதி அமெரிக்கா-வங்காளதேச வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அந்த வரி சதவிகிதம் மேலும் குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், தேர்தலுக்கு முன்பாக, அதுவும் இடைக்கால அரசில் இந்த ஒப்பந்தம் ஏன் மிகவும் அவசரமாக்கப்படுகிறது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலுக்குப் பிறகு, அந்நாட்டின் இடைக்கால தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் உள்ளார். இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்படாத முகமது யூனுஸ் நிர்வாகத்திற்கு அத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொள்ள அதிகாரம் உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தவிர, இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் அமெரிக்காவிற்கான வங்கதேச ஏற்றுமதியை மேலும் பாதிக்கக்கூடும் என அந்நாட்டு ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யூனுஸ் நிர்வாகம், அமெரிக்காவுடன் ஒரு வெளிப்படுத்தாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால், வரைவு ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது எனவும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பிறகு யூனுஸ் அமைப்பு பெரும்பாலும் அழிந்துவிடும் எனவும், மேலும் ஒப்பந்தத்தை செயல்படுத்தும் பொறுப்பு, பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பங்கும் இல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது விழும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தால் வங்கதேசம் எத்தகைய நன்மைகளைப் பெறப்போகிறது, ஒப்பந்தத்தில் என்ன நிபந்தனைகள் உள்ளன, எந்தத் துறைகள் எதிர்மறையான தாக்கங்களைச் சந்திக்கக்கூடும் உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ட்ரம்ப், யூனுஸ்

ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறை வங்கதேச பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. இது 4 -5 மில்லியன் மக்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தியுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதியாளராக விளங்கும் இந்தத் துறை, அந்நாட்டின் ஏற்றுமதி வருவாயில் சுமார் 81 - 84% வரை பெறுகிறது. மேலும்,அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% நெருங்குகிறது. அதிலும், வங்கதேசம் தற்போது அமெரிக்காவிற்கு ஆண்டுதோறும் அமெரிக்காவிற்கு தோராயமாக 7 - 8.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடைகள் மற்றும் ஜவுளிகளை ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவிற்கான மொத்த ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகள் சுமார் 96% ஆக உள்ளது. அதேநேரத்தில் சுமார் இரண்டு பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்கிறது.