இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) கவுதம் அதானி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதித்துறை தெரிவித்து இருந்தது. அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கவுதம் அதானி தவிர அவர் உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் அதானி குழும தரப்பால் மறுக்கப்பட்டது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அதானி குழுமம் உடனான ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்ய வங்கதேச இடைக்கால அரசு முடிவு செய்தது. அந்த வகையில், வங்கதேச இடைக்கால அரசாங்கம் அதானி பவர் உடனான பல பில்லியன் டாலர் ஒப்பந்தம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. கௌதம் அதானி தலைமையிலான நிறுவனம், ஒப்பந்தத்தில் முக்கியமான ஒரு மின் உற்பத்தி நிலையம் தொடர்பான வரிச் சலுகைகளை வழங்கவில்லை என இடைக்கால அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. வங்கதேசம் மற்றும் அதானி பவர் இடையே 2017ஆம் ஆண்டு கையெழுத்தான மின்சார விநியோக ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உள்ள அதானியின் நிலக்கரி மின் நிலையத்தில் இருந்து வங்கதேசத்திற்கு மின்சாரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் பல குளறுபடிகள் இருப்பதாக அந்நாட்டு இடைக்கால அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சாரத்தின் விலை, சர்வதேச சந்தையில் உள்ள சராசரி விலையைவிட 55% அதிகமாக இருப்பதாகக் கூறுகிறது. மேலும், இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வரிச் சலுகைகளை அதானி பவர் நிறுவனம் வழங்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளது. இதனால், வங்கதேச அரசுக்கு ஆண்டுக்கு 28.6 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வங்கதேச இடைக்கால அரசு, அதானி பவர் நிறுவனத்துக்கு ஏற்கெனவே 97 மில்லியன் டாலர் செலுத்தியுள்ளதாகக் கூறுகிறது. ஆனால், அதானி பவர் நிறுவனம் தனக்கு 900 மில்லியன் டாலர் பாக்கி உள்ளதாகக் கூறுகிறது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே பணம் செலுத்துவதில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பிரச்னை காரணமாக, அக்டோபர் மாதத்தில் அதானி பவர் நிறுவனம் வங்கதேசத்திற்கு வழங்கும் மின்சார அளவைப் பாதியாகக் குறைத்தது. தற்போது, வங்கதேச இடைக்கால அரசாங்கமும் இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து வருகிறது. மேலும், இந்த ஒப்பந்தத்தில் உள்ள குளறுபடிகள் குறித்து நீதிமன்ற விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மின்சார கட்டணத்தை குறைக்கவும் அதானி பவர் நிறுவனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வங்கதேச மின்துறை அமைச்சர் முஹம்மது ஃபௌசுல் கபீர் கான், ”நாட்டின் அடுத்த நகர்வு நீதிமன்ற உத்தரவு விசாரணையின் முடிவைப் பொறுத்தது. லஞ்சம் அல்லது முறைகேடுகள் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டால், நீதிமன்ற உத்தரவை நாங்கள் பின்பற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு, அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் செய்த மின்சக்தி ஒப்பந்தங்கள் சர்வதேச சட்டவிதிகளுக்கு மாறாகச் செய்யப்பட்டுள்ளன என வங்கதேச இடைக்கால அரசு அமைத்த விசாரணைக் குழு தெரிவித்திருந்தது. மின்சாரம் மற்றும் எரிசக்தி வழங்கல் சட்டத்தின் கீழ் மின்சக்தி ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி மொயீனுல் இஸ்லாம் சௌதரி தலைமையில் ஒரு குழுவை அண்மையில் அமைத்தது. இந்த குழு, கடந்த 2009 முதல் 2024-ஆம் ஆண்டுவரை பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மின் உற்பத்தி ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்தது. அதில், வங்கதேசத்தைச் சோ்ந்த நிறுவனங்கள் அனைத்தும், முந்தைய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடா்பை கொண்டுள்ளன என்பது கண்டறியப்பட்டது. அந்த வகையிலேயே வங்கதேச அரசு, அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது.இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.