அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது.
இந்த நிலையில், "அல்லாஹ் என்னை ஒரு காரணத்திற்காகவே உயிருடன் வைத்திருந்தான்" என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக உரையாடல் ஒன்றின்போது அவர், “வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருந்த முகமது யூனுஸ், மக்களை ஒருபோதும் நேசிக்காதவர். அவர் அதிக வட்டி விகிதத்தில் சிறிய தொகைகளை கடன் கொடுத்து, அந்தப் பணத்தை வெளிநாடுகளில் ஆடம்பரமாக வாழ பயன்படுத்தினார். அப்போது அவரது போலித்தனத்தை, எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் நாங்கள் அவருக்கு நிறைய உதவினோம். இதனால் நாட்டு மக்கள் பயனடையவில்லை. அவர் சுயநலமிக்கவராக இருந்தார். பின்னர் அதிகார மோகத்தை வளர்த்துக் கொண்டார். அது இப்போது வங்கதேசத்தை எரிக்கிறது.
நான் ஒரேநாளில் என் தந்தை, தாய், சகோதரர், அனைவரையும் இழந்தேன். பின்னர் அவர்கள் எங்களை நாட்டிற்குத் திரும்ப விடவில்லை. உங்கள் சொந்தத்தை இழப்பதன் வலி எனக்குத் தெரியும். அல்லாஹ் என்னைப் பாதுகாத்துக்கொண்டே இருக்கலாம், ஒருவேளை அவர் என்மூலம் ஏதாவது நன்மை செய்ய விரும்பலாம். இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது எனது உறுதிமொழி. தனக்கு எதிரான அட்டூழியங்களை செய்தவர்கள் மனிதர்களே அல்ல. அவர்கள் நீதியை எதிர்கொள்வார்கள். அல்லாஹ் இதை பொறுத்துக்கொள்ள மாட்டார். இதைக் கண்டுபிடிக்க ஒரு நாள் வரும். நான் இதை நம்புகிறேன், இல்லையெனில் நான் உயிருடன் இருக்க மாட்டேன். அவாமி லீக் உறுப்பினர்களைக் குறிவைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் நாளும் வரும்” என உரையாடலின்போது விவரித்த ஹசீனாவிடம் ஆதரவாளர் ஒருவர், ”நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், "நான் உயிருடன் இருக்கிறேன் மகனே" என்று பதிலளித்தார். மற்றொரு ஆதரவாளர் அவரிடம், "அல்லாஹ் உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவானாக" என்றார். அதற்கு அவர், "அவர் செய்வார். அதனால்தான் அல்லாஹ் என்னை உயிருடன் வைத்திருக்கிறார். நான் வருகிறேன்" என்று பதிலளித்தார்.