வட ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பினர், கிளாட் AI-ஐக் கொண்டு ஏவுகணைகளுக்கான மென்பொருளை உருவாக்க முயன்றதைக் கண்டறிந்து முடக்கியுள்ளதாக ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வெளியிட்டுள்ள 154 பக்க அச்சுறுத்தல் நுண்ணறிவு (Threat Intelligence) அறிக்கையில், இதுகுறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஈரானுக்கு ஆதரவாகச் செயல்பட்டு ஹவுதி அமைப்பினர், மத்திய கிழக்கில் அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வட ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பினர் கிளாட் (Claude) AI-ஐக் கொண்டு ஏவுகணைகளுக்கான மென்பொருளை உருவாக்க முயன்றாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள 154 பக்க அச்சுறுத்தல் நுண்ணறிவு (Threat Intelligence) அறிக்கையில், இதுகுறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. வட ஏமனில் செயல்பட்ட ஹவுதி அமைப்பினர், வணிகரீதியான மொபைல் கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ராக்கெட், 2,000 கி.மீ-க்கும் அதிக தொலைவு செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஹைப்பர்சோனிக் கிளைட் வாகனம் ஆகிய 3 திட்டங்களுக்காக கிளாட் AI-ஐப் பயன்படுத்தியுள்ளது.
ஏவுகணைகளின் திசையைக் கட்டுப்படுத்தும் GNC (Guidance, Navigation, and Control) மென்பொருளை எழுதவும், திறந்த மூல ஆட்டோபைலட் அமைப்புகளுடன் வன்பொருள்களை ஒருங்கிணைக்கவும், விண்வெளிப் போலி சோதனைகளை நடத்தவும் கிளாட் கோட் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பல கிளாட் கணக்குகளை இயக்கி, ஒன்றை குறியீடு எழுதவும், மற்றொன்றை ஆராய்ச்சி செய்யவும், மூன்றாவதை எழுதிய குறியீட்டை ஆய்வு செய்யவும் பயன்படுத்தி, ஒரு மென்பொருள் பொறியாளர் குழுவின் பணியை AI மூலம் மேற்கொண்டுள்ளனர். தவிர, AI-ன் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க, தங்களின் உண்மையான ராணுவ இலக்குகளை மறைத்து, ஒட்டுமொத்த திட்டத்தையும் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து வெவ்வேறு உரையாடல்களில் குறியீடுகளைப் பெற்றுள்ளனர்.
எனினும், இந்த சோதனை முயற்சிகள் தோல்வியில் முடிந்ததையடுத்து, அவர்கள் மீண்டும் AIயின் உதவியை நாடியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அச்சுறுத்தலைக் கண்டறிந்தவுடன், தொடர்புடைய அனைத்து கணக்குகளையும் ஆந்த்ரோபிக் உடனடியாக முடக்கியதுடன், அரசு மற்றும் தனியார் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தகவல்களைப் பகிர்ந்துள்ளது. ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளாட்' போன்ற AI மாடல்கள் இதில் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அந்த நிறுவனத்தால் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.