அபிஜித் பருசுரு
அபிஜித் பருசுரு ட்விட்டர்
உலகம்

அமெரிக்காவில் என்னதான் நடக்கிறது!! தொடரும் இந்தியர்களின் மரணங்கள்.. இதுவரை இறந்தவர்கள் யார் யார்?

Prakash J

அமெரிக்காவில் தொடரும் மரணங்கள்

சமீபகாலமாக அமெரிக்காவில் இந்தியர்களின் மரணம் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பருச்சுரி சக்ரதர் ​​- ஸ்ரீலட்சுமி. இவர்களுடைய ஒரே மகன் அபிஜித் பருசுரு. கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற இவர், தன்னுடன் படிக்கும் சக மாணவருடன் சேர்ந்து ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருந்து போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்தார். இந்த நிலையில், ஆள் நடமாட்டமில்லாத வனப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து கடந்த மார்ச் 11ஆம் தேதியன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. தங்களது மகன் மரணமடைந்த செய்தியை கேட்ட அபிஜித்தின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனையடுத்து அமெரிக்காவில் மரணமடைந்த மாணவர் அபிஜித்தின் உடல், குண்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு கடந்த 15ஆம் தேதி கொண்டுவரப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

மாணவரின் மரணம் குறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவு

இந்நிலையில், மாணவர் அபிஜித்தின் மறைவு குறித்தும், இந்த வழக்கின் விசாரணை குறித்தும் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இன்று (மார்ச் 18) எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. அதில், மாணவர் அபிஜித்தின் பெற்றோர் விசாரணை அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்து வருவதாகவும், முதற்கட்ட விசாரணையில் மாணவர் அபிஜித்தின் மரணத்தில் குற்றச்செயல்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் விசாரணையின் முடிவில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த முழுவிவரமும் தெரிய வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பிலிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து, வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய மாணவர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தியதோடு மாணவர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள 90 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் இந்த உரையாடலில் பங்கேற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024இல் மட்டும் இறந்துபோன இந்தியர்கள் யார் யார்.?

அமெரிக்காவில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை பல இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி மாணவர்கள் மரணம் அடைந்துள்ளனர். அவற்றின் விவரங்களை இங்கு பார்ப்போம்...

1. கடந்த மார்ச் 9ஆம் தேதி இந்தியாவின் தெலங்கானாவைச் சேர்ந்த வெங்கட்ரமண பித்தலா என்ற மாணவர் தண்ணீர் ஸ்கூட்டர் எனப்படும் ஜெட் ஸ்கை ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றபோது, விபத்தில் சிக்கி பலியானார்.

2. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஆனந்த் சுஜித் ஹென்றி என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டுக்குள் சடலமாக இறந்துகிடந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

3. கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, கொல்கத்தாவைச் சேர்ந்த பரதநாட்டிய நடனக் கலைஞரான அமர்நாத் கோஷ் என்பவர் செயின்ட் லூயிஸ் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

4. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள தாண்டா சாஹுவாலா கிராமத்தைச் சேர்ந்த இசைக்கலைஞரான கோல்டி என்கிற ராஜ் சிங் அலபாமா மாநிலம், செல்மா நகரில் சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாராவிற்கு ராஜ் சிங் சென்றிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

5. அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில், வர்த்தக படிப்பு படித்து வந்த ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் என்பவர் கடந்த பிப்ரவரியில் மர்ம மரணம் அடைந்து கிடந்தார்.

6. கடந்த பிப்ரவரி தொடக்கத்தில், சமீர் காமத் என்ற இந்திய மாணவர் வாரன் கவுன்டி பகுதியில் உயிரிழந்து கிடந்தார்.

7. கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி சையத் மஜாகீர் அலி என்ற ஐ.டி. மாணவர் ஒருவர் சிகாகோ நகரில் மர்ம நபர்களால் துரத்தி துரத்தி தாக்கப்பட்டார். இதில், மூக்கு, முகம் உள்பட பல இடங்களில் ரத்த காயங்கள் ஏற்பட்டன. இதுபற்றி வீடியோக்களும் சமூக ஊடகத்தில் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தின.

8. இண்டியானா மாகாணத்தில், பர்டியூ பல்கலைக்கழக மாணவரான நீல் ஆச்சாரியா என்ற மற்றொரு இந்திய மாணவர் கடந்த ஜனவரி 28ஆம் தேதி காணாமல் போனார். அதன்பின் சில நாட்களில் அவர் மரணம் அடைந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.

9. ஜனவரி 16ஆம் தேதி ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் எம்.பி.ஏ. படித்துவந்த மாணவர் விவேக் சைனி, போதை நபர் ஒருவரால் சுத்தியலால் அடித்து கொல்லப்பட்டார்.

10. அதே ஜனவரியில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த அகுல் பி.தவான் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்து கிடந்தார். அவருக்கு உடல் வெப்ப இழப்பு என்ற ஹைப்போதெர்மியா பாதிப்புகளுக்கான அறிகுறிகள் இருந்தாகக் கூறப்பட்டது.