அமெரிக்கா
அமெரிக்கா ட்விட்டர்
உலகம்

அமெரிக்காவில் முதல்முறை: நைட்ரஜன் வாயு ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றம்.. ஏன், எதற்காக, எப்படி?

Prakash J

குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுவது வாடிக்கையான நடைமுறைதான் என்றாலும், அப்படியான தண்டனைகளில் சில கடுமை, சாதாரணம் என வகைகள் உள்ளன. அது, குற்றத்திற்குத் தகுந்தபடியும், வயதைக் காரணம்காட்டியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் முதல்முறையாக தண்டனை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இரக்கம்கொண்ட மரண தண்டனை என்ற பெயரில் குற்றவாளி ஒருவருக்கு நைட்ரஜன் வாயு செலுத்தப்பட்டு, அதன்மூலம் அவரது உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

judgement

அமெரிக்காவைச் சேர்ந்தவர் சார்லஸ் சென்னட். இவருடைய மனைவி எலிசபெத் சென்னட். இந்த நிலையில் சார்லஸ், தன் மனைவி பெயரில் அதிக தொகை அளவில் காப்பீடு ஒன்றை எடுத்திருந்தார். இதற்காக அவரைக் கொலைசெய்யத் திட்டமிட்டார். இதற்காக சார்லஸ், கென்னத் யூஜின் ஸ்மித் என்பவருக்குப் பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து ஸ்மித், தன் வேறொரு கூட்டாளியுடன் இணைந்து சார்லஸின் மனைவி எலிசபெத்தைக் கொலை செய்துள்ளார். இதன்பின்னர் கணவர் சார்லஸ் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த வழக்கில் ஸ்மித்தின் கூட்டாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, 2010-ஆம் ஆண்டு அது நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஸ்மித்துக்குக் கடந்த 2022-ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்காக அவருக்கு ஊசி வழியே தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதிகாரிகளால் அவருடைய உடலில் மருந்துசெல்லும் இணைப்பைச் சரியாக மேற்கொள்ள முடியாததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், முதல் மரண தண்டனை முயற்சியிலிருந்து தப்பிய ஸ்மித்துக்கு, 2வது முறையாக கடந்த ஆண்டு (2023) மே மாதத்தில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிடப்பட்டது.

இதையும் படிக்க: ஒளியிலே மறைந்த இளையராஜா வீட்டு இளவரசி; தூரமாய்ச் சென்ற ‘பவதா’ எனும் பவதாரிணியின் நினைவலைகள்!

இந்நிலையில், ஸ்மித்துக்கு நைட்ரஜன் வாயுவைச் செலுத்தி தண்டனையை நிறைவேற்றும் உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. அந்நாட்டில் முதன்முறையாக இந்த வழியில் மரண தண்டனையானது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, தூய்மையான நைட்ரஜன் செலுத்தப்படும். இதற்காக, 30 மணிநேர கால அளவு நிர்ணயிக்கப்பட்டது. நேற்று, அதிகாலை 12 மணியளவில் தொடங்கிய இந்தக் காலஅளவு இன்று காலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அதன்படி அறை ஒன்றில் அந்தக் குற்றவாளி கட்டிவைக்கப்பட்டார். அவருக்கு முகக் கவசம் அணிவிக்கப்பட்டது. அதனுடன் சுவாசக் குழாய் ஒன்றும் இணைக்கப்பட்டது. சுவாசிக்கும் காற்றுக்குப் பதிலாக, அதன் வழியே தூய்மையான நைட்ரஜன் செலுத்தப்பட்டது.

இதன்மூலம், சில வினாடிகளில் அந்நபர் சுயநினைவை இழந்துவிடுவார். இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு அடுத்த சில நிமிடங்களில் அவர் இறந்தார் எனவும், அவருடைய மரணம் 22 நிமிடங்களில் முடிந்தது எனவும், அந்தச் சமயத்தில் அவர் படுக்கையில் அதிகம் துடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது வலியில்லாத மற்றும் இரக்கம்கொண்ட மரண தண்டனையாகும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் மரண தண்டனை ஊசிக்குப் பிறகு, இப்போது இந்த வகையில் மரண தண்டனை வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

இந்த முறையில் ஸ்மித்திற்கு மரண தண்டனை வழங்கியது குறித்து, ஐநா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், “நைட்ரஜன் வாயு மூச்சுத்திணறல் மூலம் அமெரிக்காவில் கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றியது சித்திரவதைக்கு சமம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மாலத்தீவு நோக்கி விரையும் சீனக் கப்பல்.. இந்தியாவுக்கு முற்றும் நெருக்கடி - பின்னணி என்ன?