அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஓர்லென்ஸில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நோக்கி வேகமாக வந்த கார், அவர்கள் மீது மோதியது. காரில் இருந்து இறங்கிய நபர் துப்பாக்கியைவைத்து சுடத் தொடங்கினர். உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் பதில் தாக்குதல் நடத்தியதில், அந்த நபர் உயிரிழந்தார். இருப்பினும், தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து எஃ.பி.ஐ. விசாரணை தொடங்கியது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் டெக்ஸாஸைச் சேர்ந்த சாம்சுட் டின் ஜப்பார் என்பது தெரியவந்தது. அவர் பயன்படுத்திய வாகனத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொடி இருந்ததால், இதன் பின்னால், தீவிரவாத இயக்கம் இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், தாக்குதல் நடத்திய ஜப்பார் பற்றி பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
42 வயதான ஜப்பார், டெக்சாஸில் பிறந்த ஒரு ராணுவ வீரர் மற்றும் அமெரிக்க குடிமகன் என்று FBI தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். அவர் கடந்த 2009 முதல் 2010 வரை ஆப்கானிஸ்தானில் பணியமர்த்தப்பட்டுள்ளார். 2015இல் ராணுவத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
கிழக்கு டெக்சாஸில் உள்ள பியூமொன்ட்டில் இஸ்லாமிய மதத்தைத் தழுவி வளர்க்கப்பட்டுள்ளார். ஆனால் பல ஆண்டுகளாக அந்த மத நம்பிக்கையிலிருந்து வெளியேறிய அவர், சமீபத்தில்தான் மீண்டும் அதற்குத் திரும்பியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2015இல் ஜார்ஜியா மாநில பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர், கணினி தகவல் அமைப்புகளில் பட்டம் பெற்றுள்ளார். 2021இல் கணக்கியல் நிறுவனமான டெலாய்ட்டில் பணிபுரிந்துள்ளார். அவர் மூன்று பெண்களைத் திருமணம் செய்துள்ளார். இதில் இரண்டு உறவுகளில் இருந்து அவருக்கு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து தொடர்பான வழக்குகளிலும் அவர்மீது மோசடி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் திருட்டு தொடர்பான குற்றப் பதிவு வழக்குகளும் அவர்மீது உள்ளன. 2023இல் அவர் காலாவதியான உரிமம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
2020இல் வெளியிடப்பட்ட ஒரு யூடியூப் வீடியோவில், ’ராணுவத்தில் இருந்த காலம் தனக்கு சிறந்த சேவையின் அர்த்தத்தையும், பதிலளிக்கக்கூடிய மற்றும் எல்லாவற்றையும் தீவிரமாக எடுத்துக்கொள்வதையும் உறுதி செய்தது’ எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், அவர் ஐ.எஸ். அமைப்பால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையெ அவர் பயன்படுத்திய மொபைல் போன்கள், கணினிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து FBI துணை உதவி இயக்குனர் கிறிஸ்டோபர் ரையா, “இந்த தாக்குதலில் அவருக்கு யாரேனும் உதவி செய்தார்கள் என்று குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை. ஆனால், அவர் ஐஎஸ் அமைப்பு மூலம் 100% ஈர்க்கப்பட்டவர் என்று நான் உங்களுக்குச் சொல்ல உறுதியாகச் சொல்ல முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இச்சம்பவம் குறித்து அதிபர் ஜோ பைடன், ”நியூ ஆர்லேன்ஸ் பகுதியில் அரங்கேறிய தாக்குதலுக்கும் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற சம்பவத்துக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களால், பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் உறுதிப்பாடு வலுவிழக்காது. இதைக் கண்டு ஒருபோதும் அஞ்சமாட்டோம். ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும், அவற்றின் இடத்திற்கு கொண்டு சேர்ப்போம். அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு என்றும் இடம் கிடையாது” எனக் கூறினார்.