Alireza Arabi web
உலகம்

ஈரானின் புதிய தலைவர் தேர்வு.. யார் இந்த அலிரேசா அராபி..? அவருக்கு இருக்கும் சவால் என்ன?

ஈரானின் தற்காலிக தலைவராக அலிரேசா அராபி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் பின்னணி குறித்தும், அவருக்கு இருக்கும் சவால்கள் குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Praveen Joshva L

அயதுல்லா அலி காமேனியின் மரணத்தால் ஈரானில் ஏற்பட்ட அதிர்வலைகளுக்கு பின்னர், அந்நாட்டின் அடுத்த அதிஉயர் தலைவராக அலிரேசா அராபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் சவாலும், ஈரானை மீட்டெடுக்கும் பொறுப்பும் இவருக்கு உள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்துவந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டுள்ளார். அயதுல்லா அலி காமேனியின் மறைவு ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு பின்னர் ஈரானின் அதிஉயர் தலைவராக யார் வருவார் என்பது குறித்து பெரும் விவாதம் எழுந்தது.

அயதுல்லா அலி காமேனியின் மகன் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் மூத்த மதத்தலைவர் அலிரேசா அராபி ஆகியோரில் ஒருவரே ஈரானின் அடுத்த அதிஉயர் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பாக்கப்பட்டது.

அலிரேசா அராபி

இந்த சூழலில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அந்நாட்டின் சக்தி வாய்ந்த அமைப்பான நிபுணர்கள் அவை கூடி தேர்ந்தெடுக்கும் வரை ஈரானின் அடுத்த அதிஉயர் தலைவர் பொறுப்புக்கு அலிரேசா அராபி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அலிரேசாவிற்கு இருக்கும் சவால் என்ன?

1959-ல் ஈரானில் பிறந்த அலிரேசா அராபி 11 வயதிலேயே மத பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இவரின் தந்தை இப்ராகிம் அராபி, ஈரானியப் புரட்சியின் தந்தையாக கருதப்படும் அயதுல்லா கொமேனிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் சிறு வயதிலேயே அலிரேசா அராபியின் கைகளுக்கு முக்கிய பொறுப்புகள் வந்தது.

அலிரேசா அராபி

ஈரானில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவருக்கு ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த மதக் கல்வி நிலையங்களை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும், நாட்டின் சட்டங்கள் மற்றும் தேர்தல் வேட்பாளர்களை அங்கீகரிக்கும் 12 பேர் கொண்ட குழுவில் ஒருவராகவும், அடுத்த உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட Assembly of Experts அவையின் உறுப்பினராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.

இஸ்ரேல், அமெரிக்காவின் அடுத்தகுறி இவரா..?

கடந்த 2022-ல் வத்திக்கான் நகரில் கிறிஸ்தவ ஆன்மிக தலைவர் போப் பிரான்சிஸைச் சந்தித்துப் பேசிய ஈரானிய மூத்த மதகுருக்களில் இவரும் ஒருவர். இப்படி இதற்கு முன்னர் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அலிரேசா அராபி தற்போது ஈரானின் அடுத்த அதிஉயர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாத்திகம் மற்றும் பிற மதங்களுக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களைக் கொண்டவராக கருதப்படும் இவர், 2022-ம் ஆண்டு ஈரானில் பெண்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற மஹ்சா அமினி போராட்டத்தின் போது, இவர் போராட்டக்காரர்களை மிகக் கடுமையாக விமர்சித்தது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

iran new supreme leader alireza arafi

ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், அவர்களின் அடுத்த இலக்காக அலிரேசா அராபி மாறலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் போரில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து வரும் ஈரானை அதில் இருந்து மீட்டு கொண்டுவரும் பொறுப்பும் இவர் மேல் விழுந்துள்ளது.