நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் இன்று காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டததோடு பனிப்பாறையிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்நிலச்சரிவின் மண் மற்றும் பாறைகள் ஆற்றுப் பாதையை அடைத்ததால், அந்த பகுதியில் பெரிய அளவில் நீர் தேங்கியுள்ளது.
இப்படி தேங்கிய நீர் திடீரென உடைப்பெடுத்து வெள்ளமாக மாறி, போதே கோஷி (Bhote Koshi) ஆற்றில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளை நோக்கி பெரும் வேகத்தில் கரைபுரண்டு வந்துள்ளது. பல மீட்டர் தூரம் உயரத்துக்கு வந்த இந்த பெரு வெள்ளம் காரணமாக நேபாளத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பெருவெள்ளம் காரணமாக உயிரிழப்பு 100க்கும் அதிகமாகியுள்ள நிலையில், காணாமல் போன பல நூறு பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த பெருவெள்ளம் காரணமாக நேபாளத்தின் பல்வேறு சாலைகளும் பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன அல்லது பாதுகாப்பற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த பேரிடர் சூழலை பயன்படுத்தி நேபாளத்தில் இருந்து செல்லும் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விடக் குறைவான விலையில் பயணச்சீட்டுகளை வழங்க வேண்டும் என்றும், தற்போதுள்ள விலைகளை உயர்த்த வேண்டாம் என்றும் நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAN) உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
நேபாள ஏர்லைன்ஸ், புத்தா ஏர், யெட்டி ஏர்லைன்ஸ், ஸ்ரீ ஏர்லைன்ஸ், சம்மிட் ஏர், தாரா ஏர் மற்றும் சீதா ஏர் ஆகிய விமான நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சமூக வலைத்தளங்களில் இது போன்ற பேரிடர் சூழல்களில் விமான நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.