Bryan Catanzaro, Nvidia web
உலகம்

"AI மனிதனைவிட அதிக செலவுமிக்கது" - எச்சரிக்கும் Nvidia நிறுவன அதிகாரி!

மனித ஊழியரைவிட AI தொழில்நுட்பத்துக்குc செலவு அதிகமாகும். 77% வேலைகளில் மனிதர்களே இன்னும் மலிவான தேர்வாக இருக்கிறார்கள்.

PT WEB

மெட்டா, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்து AI-க்கு மாறிக் கொண்டிருக்கும் நிலையில், AI மனித ஊழியர்களைவிட அதிக செலவானது என என்விடியா அதிகாரி எச்சரிக்கிறார்.

செய்தியாளர்; m.மீரா

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மெட்டா (Meta) நிறுவனம் தனது பணியாளர்களில் 10 சதவீதத்தினரை (சுமார் 8,000 பேர்) பணிநீக்கம் செய்யவும், காலியாக உள்ள 6,000 பணியிடங்களுக்கு ஆள்சேர்க்கும் திட்டங்களைக் கைவிடவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. நிறுவனத்தை இன்னும் திறமையாக நிர்வகிப்பதற்கும், நாங்கள் மேற்கொள்ளும் பிற முதலீடுகளுக்கான செலவுகளை ஈடுசெய்வதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளது என்று மெட்டா அறிவித்தது.

Meta

மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனமும் தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிலிருந்து விலகும் திட்டத்தை (voluntary buyout) அறிவித்தது.

இவ்வாறு பணிநீக்கம் செய்து AI தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சிகள் பல நிறுவனங்களில் நடைபெற்றுவரும் நிலையில், கணினிச் செயல்பாட்டிற்கான செலவு ஊழியர்களுக்கான செலவைவிட மிக அதிகம். மனித ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதைவிட, தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு அதிக செலவு பிடிப்பதாக என்விடியா (Nvidia) நிறுவன அதிகாரி Bryan Catanzaro தெரிவித்துள்ளார்.

அதாவது, "செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நிறுவனங்களுக்குப் பணியாளர் செலவைக் குறைப்பதில்லை; மாறாக, தற்போது பணியில் உள்ள மனிதர்களைக் காட்டிலும் இதற்கான செலவுதான் அதிகமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

இவரின் இந்தக் கூற்றை வேறு தரவுகளும் உறுதிப்படுத்துகின்றன. வெறும் 23% வேலைகளில் மட்டுமே செலவு குறைந்ததாக இருப்பதாகவும் மீதமுள்ள 77% வேலைகளுக்கு, மனிதர்களே இன்னும் மலிவான தேர்வாக உள்ளனர் என்றும் MIT ஆய்வு கண்டறிந்துள்ளது.

Nvidia

இருப்பினும், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வேகத்தைக் குறைக்கவில்லை. 2026-ல் செயற்கை நுண்ணறிவில் சுமார் $740 பில்லியன் முதலீடு செய்யப்படவுள்ளது; செலவுகள் அதிகரித்து, முதலீடுகள் எல்லாத் துறைகளிலும் வேகமெடுத்து வருகின்றன.

அதேநேரத்தில், வேலைகள் இன்னும் குறைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் 92,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் பணியாளர்கள் ஏற்கெனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று செயற்கை நுண்ணறிவு மலிவானது அல்ல. ஆனால், நாளை அது தடுத்து நிறுத்த முடியாததாக மாறக்கூடும் என்று கூறப்படுகிறது.