இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் திடீர் போர்ப் பதற்றம், உலக நாடுகளுக்கு இடையே கவலையை அதிகரித்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கக்கூடாது என்ற நிலையிலேயே, அமெரிக்காவின் ஆதரவில் இஸ்ரேல் இத்தகைய போரைத் தொடங்கியுள்ளது. காரணம், ஈரானின் நடான்ஸ் பகுதியில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் 60 சதவிகிதம் உள்ளது. இதை வைத்து ஈரான், விரைவாகவே அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியும் என்பதுதான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வாதமாக உள்ளது. அந்த அச்சத்தின் காரணமாகவே இப்போர் தொடங்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
இந்த நிலையில், உலக நாடுகள் வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி வருகின்றன. அதுகுறித்து இங்கு பார்ப்போம். உலகளவில் அணுஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் பாதுகாப்பு ரீதியிலும் வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன. தற்போது ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதவதற்கும் அணுஆயுதம் குறித்த அச்சமே காரணம். அணுஆயுதங்கள் மனித குலத்திற்கே பேரபாயமாக கருதப்படுகின்றன.
ஒரே ஒரு அணுகுண்டு ஒரு சில நிமிடங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கக்கூடியது. அது மட்டுமல்ல... குண்டு விழுந்த இடத்தை சுற்றி நீடித்திருக்கும் கதிர்வீச்சு தலைமுறை தலைமுறைக்கும் மனிதர்களுக்கு விதவிதமான பாதிப்புகளை கொடுத்துக்கொண்டே இருக்கும். ஜப்பானில் 1945இல் அமெரிக்கா போட்ட குண்டே அணுஆயுதங்கள் எவ்வளவு கொடூரமானது என்பதற்கு ஒரு உதாரணம். உலகளவில் தற்போது 9 நாடுகளிடம் அணுகுண்டுகள் உள்ளன. ரஷ்யாவிடம் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 449 அணுகுண்டுகள் உள்ளன.
அமெரிக்காவிடம் 5 ஆயிரத்து 277, சீனாவிடம் 600, பிரான்சிடம் 290, பிரிட்டனிடம் 225 அணுகுண்டுகள் உள்ளன. பாகிஸ்தானிடம் 180 அணுகுண்டுகளும் இந்தியாவிடம் 170 அணுகுண்டுகளும் உள்ளன. இஸ்ரேலிடம் 90 அணுகுண்டுகள் உள்ளன. வடகொரியாவிடம் 50 குண்டுகள் உள்ளன. உலகளவில் சுமார் 12 ஆயிரத்து 331 அணுகுண்டுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அணு விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் புள்ளிவிவரங்கள்படி இது தெரியவந்துள்ளது.