தைவான் நிலநடுக்கம்
தைவான் நிலநடுக்கம் pt web
உலகம்

தைவான்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7 பேர் உயிரிழப்பு.. அங்குள்ள தமிழர்கள் சொல்வதென்ன?

Angeshwar G

தைவான் நாட்டில் ஹூவாலியன் இன்று காலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோளில் 7.4 என்ற அளவுகோளில் பதிவான நிலநடுக்கம், கடந்த 25 ஆண்டுகளில் வந்த மிகப்பெரிய நிலநடுக்கமாககும். இதனால் பல கட்டடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, 1999 ஆம் ஆண்டு 7.2 என்ற அளவில் Nantou county பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே, தைவானில் அதிகபட்சமாக ஏற்பட்ட நிலநடுக்கமாகும். அந்த நிலநடுக்கத்தின் காரணமாக 2500 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர்.

தைவான், நிலநடுக்கம்

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, ரிக்டர் அளவுகோலில் 7.4 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தைவானின் பூகம்ப கண்காணிப்பு நிறுவனம், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக இருந்ததாக தெரிவித்துள்ளது.

7 பேர்உயிரிழப்பு

நகரைச் சுற்றியிருந்த மலைப்பாதைகளில் நடைபயணம் மேற்கொண்ட 7 பேர் கொண்ட குழுவில், நிலநடுக்கத்தின் போது 3 பேர் பாறை இடுக்குகளில் சிக்குண்டு உயிரிழந்தனர். இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.800க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், 50 க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கம் அதிகளவில் உணரப்பட்ட ஹூவாலியன் பகுதிகளில் 26 கட்டடங்கள் சரிந்துவிழுந்துள்ளன. சுமார் 20 நபர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகவும், அவர்களை மீட்பதற்கான பணிகள் வேகமாக நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவானில் சிக்கி இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பு குறித்து India Taipei association தனது எக்ஸ் தளத்தில் அவசர எண்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (தைவான்: மொபைல்: 0905247906; மின்னஞ்சல்: ad.ita@mea.gov.in). மேலும், தைவானில் இருக்கும் இந்தியப் பிரஜைகள் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவான் தமிழர்கள் சொல்வதென்ன?

பொன்முகுந்தன், தைவான் தமிழ் சங்கம்

தைவானின் தற்போதைய நிலைமைகள் குறித்து தைவானில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் பொன்முகுந்தன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக கூறியதாவது, “நாங்கள் தைவானில் 18 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தைவானில் நாங்கள் எதிர்கொண்டதிலேயே இதுதான் மிகப்பெரிய நிலநடுக்கம். தைவானில் இந்தியர்கள் கிட்டத்தட்ட 5000 பேருக்கும் மேல் இருக்கிறார்கள்.

தமிழர்கள் 1300க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். நாங்கள் முகநூல் வழியாகவும், வாட்ஸாப் வழியாகவும் இணைப்பில்தான் இருக்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியில் இருக்கின்றனர். மோசமான விஷயம் என்னவெனில், தைவான் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து பகுதியினரையும் தொடர்பு கொள்ள முயல்கிறோம்” என தெரிவித்தார். அவர் பேசிய முழுமையான விஷயங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.