திபெத் நிலநடுக்கம் முகநூல்
உலகம்

515 முறை உணரப்பட்ட நில அதிர்வுகள்! 126 பலிகளுக்கு பிறகும் திபெத்தை அதிரவைத்த சம்பவம்

டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் என்பது உணரப்பட்டது.

ஜெனிட்டா ரோஸ்லின்

திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் கடந்த 7 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 126 பேர் கட்டிட இடர்பாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். 1000க்கும் மேற்பட்டோரின் வீடுகள் விரிசலால் பாதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் காணப்பட்டது. இதனையடுத்து, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும்படி, சீன அதிபர் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் என்பது உணரப்பட்டது.

இந்தநிலையில்தான், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு 515 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது என்று சீனாவின் நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுத்தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி 8-ந் தேதி காலை 8.00 மணி நிலவரப்படி, மொத்தம் 515 அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதில் 488 நில அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 3.0 புள்ளிகளுக்கு கீழே இருந்தன. 24 நில அதிர்வுகள் 3.0 முதல் 3.9 புள்ளிகள் வரையிலும், 27 நில அதிர்வுகள் 4.0 முதல் 4.9 புள்ளிகள் வரையிலும் பதிவாகின" என தெரிவிக்கப்பட்டுள்ளது.