அணு உலைப் பேரழிவு Ukrinform
உலகம்

செர்னோபில் | மௌனத்தில் பேசும் பேரழிவு.. ஒரு இரவு, ஒரு வெடிப்பு, முடிவில்லா வலி!

மனித வரலாற்றின் மிகக் கருங்கால நினைவுகளில் ஒன்றான செர்னோபில் அணு உலை பேரழிவின் 40ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், அத்துயரத்தின் சுவடுகளை சற்று பின்னோக்கி பார்க்கலாம்.

PT WEB

காலம் ஓடிவிட்டது... ஆனால் அந்த ஒரு இரவு மட்டும் இன்னும் உறைந்துதான் கிடக்கிறது. சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தபோது, அப்போதைய சோவியத் யூனியன்... தற்போதைய உக்ரைனின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட அந்தப் பெரும்வெடிப்பு, பல்லாயிரம் கனவுகளைச் சாம்பலாக்கியது. விஞ்ஞானிகளின் ஒரு சாதாரண பரிசோதனை மிகப்பெரிய பேரழிவை பரிசாக தந்த இரவு அது.

செர்னோபில அணு உலை

செர்னோபில் அணு உலையின் 4ஆவது அலகில் மின்சாரம் தடைப்பட்டால், உலை எப்படி செயல்படும் என்பதை அறிய முயன்றனர். ஆனால், செயல்முறை விதிமுறைகள் மீறப்பட்டன. பாதுகாப்பு அமைப்புகள் சில நேரம் முடக்கப்பட்டன. அந்த சில நொடிகளில் நடந்த தவறுகள்… கட்டுப்படுத்த முடியாத சங்கிலித் தாக்கத்தை உருவாக்கின. அது ஒரு நகரத்தை மட்டுமல்ல, பல தலைமுறைகளின் எதிர்காலத்தையும் காயப்படுத்தியது. அன்று அதிகாலையில் தீயை அணைக்க ஓடிய அந்த வீரர்கள், தங்களைச் சுற்றியிருந்தது வெறும் நெருப்பு அல்ல, கண்ணுக்குத் தெரியாத எமன் என்று தெரிந்தும் பின்வாங்கவில்லை.

தியாகத்தின் உச்சமாய் அவர்கள் கருகிப்போனார்கள். பிரியாத் நகரின் தெருக்களில் இன்று மனித நடமாட்டம் இல்லை. ஆனால் கைவிடப்பட்ட பொம்மைகளும், துருப்பிடித்த ராட்டினங்களும் இன்றும் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் அழுகைச் சத்தத்தை எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. அங்கே பூக்கும் பூக்கள் கூட கதிரியக்கத்தின் ரணத்தைச் சுமந்தே பூக்கின்றன. கதிரியக்கம் சுமந்த காற்று, ஒரு தலைமுறையையே ஊனமாக்கியது.

அணு உலைப் பேரழிவு

வேரோடு பிடுங்கி எறியப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு இன்றும் மருந்தில்லை. 40 ஆண்டுகள் கடந்த பின்னும், செர்னோபில் நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான். இயற்கைக்கு எதிரான மனிதனின் பேராசைக்குத் தரும் விலை மிக அதிகம். செர்னோபில்… அது ஒரு விபத்து மட்டுமல்ல; மனிதர்களின் தவறுகளும், தியாகங்களும், நம்பிக்கையும் சேர்ந்து எழுதப்பட்ட ஒரு நிரந்தர பாடம்.