Lizzy Ashliegh பகிர்ந்த புகைப்படம்
Lizzy Ashliegh பகிர்ந்த புகைப்படம் இன்ஸ்டா
உலகம்

5 மனைவிகளுக்கு ஒரே நேரத்தில் வளைகாப்பு; இருவருக்கு ஒரேநாளில் பிரசவம்-வைரலான 22 வயது அமெரிக்க இளைஞர்!

Prakash J

மாற்றம் காணும் உலகம்

கால மாற்றத்தில், காதினிக்கும் செய்திகள் நம்முடைய கைப்பேசிக்குள் வந்து விழுந்தவண்ணம் இருந்தாலும், மறுபுறம் காதைக் கொடுத்துக் கேட்கவே முடியாத செய்திகளும் வலம்வருவதுதான் பலருக்கும் வேதனையாக இருக்கிறது. எனினும், காலஓட்டத்தில் அனைத்தையும் மறந்து அதன்கூடவே பயணிப்பது வாடிக்கையாகிவிடுகிறது. சமீபகாலமாக, மாணவர் டீச்சரைக் காதலிப்பதும், டீச்சர் மாணவரைக் காதலிப்பதும், கடைசியில் அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி இணைந்துவாழ்வதும் செய்திகளில் காணமுடிகிறது. அதாவது, தம்மைவிட வயது குறைந்த நபரை, அதிலும் இளம்சிறாரரை, அறிவு மற்றும் வயதுமிகுந்த ஆசிரியைகள் செய்யும் செயல்கள் அநாகிரிமாகப் பார்க்கப்படுகிறது. அவர்களுக்குப் புத்தி சொல்லி திருத்தவேண்டியவர்களே, இப்படிச் செய்கிறார்கள் என ஏளனப் பேச்சுகளும் அடிபடுகின்றன.

5 பெண்களைத் தாய்மை அடையச் செய்த 22 வயது அமெரிக்க இளைஞர்!

இந்த நிலையில்தான் அமெரிக்காவில் 22 வயது நிறைந்த இளைஞர் ஒருவர், அவரைவிட வயது அதிகமுள்ள 5 பெண்களைக் கர்ப்பமாக்கி, ஒரேநாளில் இணையத்தில் வைரலாகி இருக்கிறார். அதில் 29 வயது நிறைந்த பாடகியான லிஸ்ஸி ஆஷ்லிக் (Lizzy Ashliegh) என்பவர், இதுகுறித்து வெளியிட்ட பதிவுதான் இணையத்தில் வைரலாவதற்குக் காரணம். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இசைக் கலைஞராக விளங்கி வருபவர் ஸெட்டி வில்ஸ். இவர் மூலம்தான் லிஸ்ஸி உட்பட 5 பெண்கள் (Lizzy Ashliegh, Bonnie B, Kay Merie, Jyelene Vila, Iyanla G) கர்ப்பமாகி உள்ளனர். அதிலும், அந்த 5 பேருக்கும் ஒரேநேரத்தில் வளைகாப்பு விழா நடத்தப்பட்டிருப்பதுதான் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

இதையும் படிக்க: ராமர் கோயில் பிரதிஷ்டை: கர்நாடக பாஜக எம்.பியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.. வைரல் வீடியோ!

தாய்மை குறித்து இணையத்தில் பதிவிட்ட 29 வயது பெண்மணி!

தன்னைத்தவிர தன் கணவர் ஸெட்டி வில்ஸ் மூலம் தாயான பிற பெண்கள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லிஸ்ஸி ஆஷ்லிக், அதில் பதிவு ஒன்றையும் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவில் ’லிட்டில் ஸெட்டி வில்ஸ் 1-5வை வரவேற்கிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து வைரலானதுடன், நெட்டிசன்கள் பலரும் கேள்விமேல் கேட்கள் ஆரம்பித்தனர். குறிப்பாக, நெட்டிசன்கள் பலரும், ‘இது எப்படி சாத்தியம்?, இது நம்பும்வகையில் இல்லை, உங்கள் 5 பேருக்கு இடையே சண்டையே வராதா, எப்படி 5 பெண்களும் பொறாமை மற்றும் கோபம் இல்லாமல் ஒரேநபர் மூலம் கர்ப்பம் அடைந்து, ஒரே இடத்தில் Baby Shower கொண்டாட முடியும்’ எனப் பதிவிட்டனர்.

5 பெண்களும் தாய்மை அடைந்தது குறித்து விளக்கிய லிஸ்ஸி

இதற்குப் பதிலளித்துள்ள லிஸ்ஸி, “நடந்ததை எதையும் மாற்ற முடியாது. எங்கள் 5 பேரின் குழந்தைக்கு அப்பா ஒருவர்தான். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அனைத்தும் ஏதேனும் ஒரு காரணத்திற்காகத்தான் நடைபெறுகிறது. 5 பேருடன் பல நேரங்களில் அவர் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்தோம். எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை அழிக்கமாட்டோம். இதை எங்கள் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் ஒன்றாக வேலைசெய்ய முடிவு செய்துள்ளோம். எங்கள் முடிவுக்கு எங்கள் குடும்பத்தினர் ஆதரவாக உள்ளனர். நாங்கள் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டோம். குழந்தைகளுக்கும் இது நல்லதாக இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், ”எல்லாம் நல்லபடியாக முடிந்தால் விரைவில் குடும்பத்தினரின் எண்ணிக்கை 11 ஆகும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்றால், அந்த 5 பேரில் இருவருக்கு ஒரே நாளில் பிரசவ தேதி குறிக்கப்பட்டிருக்கிறதாம்.

இதையும் படிக்க: இந்திய விமானத்திற்கு அனுமதி மறுத்த மாலத்தீவு அதிபர்.. உயிருக்குப் போராடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!