அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த டிடிவி தினகரன் முயற்சி செய்கிறார் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறினார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்தார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருந்தார். இது பரபரப்பானது. இந்நிலையில் அதை மறுத்துள்ளார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி.
புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
டிடிவி தினகரன் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அவர், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பாக சசிகலா மூலமாக மீண்டும் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். வைத்தபோதே உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்தார். அது முடியாமல் போனதால் தான் குழம்பியது மட்டுமின்றி, மற்றவர்களையும் குழப்புவதற்காக இப்படி புதிய புதிய கருத்துக்களை அவர் சொல்லிக் கொண்டு வருகிறார்.
Read Also -> ஆளுநரை இன்று சந்திக்கிறார் முதல்வர்
ஒரு கட்சியையும் ஆட்சியையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று உயர்ந்த சிந்தனையோடு செயல்பட்டவர் எங்கள் ஒருங்கிணைப் பாளர் ஓ. பன்னீர் செல்வம். அப்படிப்பட்டவர் இவர்களை போல கீழ்த்தரமான நிலைக்குச் செல்லமாட்டார் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். தினகரன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, இந்த இயக்கத்தை கைப்பற்றுவதற்காகக் கட்டுக்கதைகளை அவிழ்த்துக் கொண்டிருக் கிறார். சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என்றுதான் துணை முதலமைச்சர் தர்மயுத்தம் தொடங்கியவர். அப்படியொரு சூழ்நிலையில் இயக்கத்தை காப்பாற்றவும் ஆட்சியை காப்பாற்றவும் எடப்பாடி பழனிச்சாமியுடம் ஒன்றாக இணைந்தோம். முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.
Read Also -> ஓபிஎஸ் என்னை சந்தித்தார்: டிடிவி தினகரன் பேட்டி
ஓபிஎஸ்-தினகரன் சந்திப்புக்கு ஆதாரம் இருப்பதாக அவர்கள் சொல்வதாக கேட்கிறீர்கள். அதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும் ஜெயலலிதா இருந்த காலத்தில் பல்வேறு நிகழ்வுகளில் இவர்கள் உடனிருந்திருப்பார்கள். அந்தப் போட்டோக்களை கூட இவர்கள் ஆதாரம் என்று காட்ட லாம். அதை ஏற்றுக்கொள்ள முடியாது
இவ்வாறு கூறினார்.