தென்காசியில் அனந்தன் அய்யாசாமி தொடங்கிய டென்செமி நிறுவனம், செமிகண்டக்டர் சிப் வடிவமைப்பில் கவனம் செலுத்தி, AI மற்றும் IoT போன்ற துறைகளில் முன்னேற்றம் காண்கிறது. இது கிராமப்புறங்களில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதாரணமாக திகழ்கிறது. ஜோஹோவின் முன்னோடி முயற்சியைப் போல, இந்நிறுவனமும் சிறிய நகரங்களில் திறமைகளை வளர்க்கிறது.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள முன்னாள் இன்டெல் (intel) பொறியியல் இயக்குநரான அனந்தன் அய்யாசாமி, தமிழ்நாட்டின் தென்காசியில் டென்செமி (Tensemi) என்ற சிப் வடிவமைப்பு நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார்.
இந்த முயற்சி AI, உயர் செயல்திறன் கணினி (HPC) மற்றும் ஐஒடி (IoT) ஆகியவற்றிற்கான செமிகண்டக்டர் IP-ஐ உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது, இது ஒரு கிராமப்புறத்தில் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தென்காசி போன்ற ஒரு சிறிய நகரத்தில் இதுபோன்ற ஒரு முயற்சியைத் தொடங்குவது அசாதாரணமானது மற்றும் தனித்துவமானது. ஏனெனில் செமிகண்டக்டர் சிப் வடிவமைப்பு என்பது பொதுவாக உலகளாவிய தொழில்நுட்ப மையங்களில் நிகழும் மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் மேம்பட்ட துறையாகும். அந்தவகையில் முன்னர் வெளிநாடுகளில் அல்லது முக்கிய நகரங்களில் பணிபுரிந்த நிபுணர்களை இப்போது தென்காசி ஈர்க்கிறது.
semiconductor தொழில் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறது ஒன்று சிப் உற்பத்தி, மற்றொன்று சிப் வடிவமைப்பு. சிப் உற்பத்தி என்பது பெரிய தொழிற்சாலைகளில் semiconductor சிப்களை உற்பத்தி செய்வதாகும். இதற்கு மிகப்பெரிய மூலதனம் மற்றும் கனரக உள்கட்டமைப்பு தேவைப்படுவதால், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே அத்தகைய ஆலைகளை இயக்க முடியும்.
அதனால் அனந்தன் அய்யாசாமி தொடங்கியுள்ள டென்செமி (Tensemi) நிறுவனம் சிப் டிசைனிங்கை மட்டும் கையில் எடுத்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
தென்காசியின் மாற்றத்திற்கான அடித்தளம் 2011-ல் ஜோஹோ (zoho) மாதலம்பாறை கிராமத்தில் வெறும் ஆறு ஊழியர்களுடன் ஒரு சிறிய அலுவலகத்தைத் திறந்தபோது தொடங்கியது. அந்த நேரத்தில், பலர் இந்த முயற்சியை சந்தேகித்தனர், கிராமப்புறங்களில் ஒரு உலகளாவிய மென்பொருள் நிறுவனத்தை ஆதரிக்க போதுமான திறமையான சூழல் இருக்காது என்றனர்.
பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னை அல்லது பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இருந்து மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் ஜோஹோ (zoho) வேறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றியது.
பெருநகரங்களில் இருந்து மட்டும் பணியமர்த்துவதற்குப் பதிலாக, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருந்து திறமையான மாணவர்களை அடையாளம் காண்பதில் நிறுவனம் கவனம் செலுத்தியது. இன்று, தென்காசி பகுதியில் ஜோஹோ (zoho) சுமார் 1,200 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
இந்தசூழலில் தற்போது அனந்தன் அய்யாசாமி நிறுவியிருக்கும் டென்செமி நிறுவனம் தென்காசியில் வளர்ச்சியடைந்துவரும் நிலையில், அதற்கு ஸ்ரீதர் வேம்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.