உயிரிழந்த ராதாகிருஷ்ணன்
உயிரிழந்த ராதாகிருஷ்ணன் PT WEB
தமிழ்நாடு

“இது கட்டாய திருமணம்; என் சாவுக்கு இவங்கதான் காரணம்”- கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் விபரீத முடிவு

விமல் ராஜ்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(27). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தேவி (26) என்ற பெண்ணும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேவியைத் திருமணம் செய்ய ராதாகிருஷ்ணன் மறுத்து வந்ததாகக் கூறி, தேவியின் உறவினர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராதா கிருஷ்ணனை அழைத்து வந்து, காவல்நிலைய வாசலில் உள்ள கோவிலில் தேவியுடன் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

கடிதம் எழுதி வைத்து விட்டு, மணமகன் தற்கொலை!

இதனால் மனமுடைந்து போன ராதாகிருஷ்ணன், இன்று அதிகாலை அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மரணத்திற்குப் பெண்ணின் உறவினர்கள் 5 பேர் தான் காரணம் எனக் கடிதம் எழுதி வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம்

இது குறித்துத் தகவலறிந்து வந்த, போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த, போலீசார் இது கொலையா? அல்லது தற்கொலையா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.