உயிரிழந்த கார்த்திக்
உயிரிழந்த கார்த்திக்  PT WEB
தமிழ்நாடு

சென்னை: நண்பனை கொலை செய்து வீடியோ எடுத்து அனுப்பிய இளைஞர் - 20 நாட்கள் கழித்து உடலை மீட்ட போலீஸ்!

webteam

சென்னை எண்ணூர் அடுத்த அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (23), இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி வேலைக்குச் சென்றவர் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை எனக் கூறப்படுகிறது. கார்த்திக் சகோதரர் முருகன் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை என்பதால், எண்ணூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்

கற்களால் மூடப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலம்

இந்தநிலையில், கடந்த 5ம் தேதி அன்னை சிவகாமி நகர் தண்டவாளத்தின் அருகில், அழுகிய நிலையில் ஆண் சடலம் கற்களால் மூடப்பட்ட நிலையில் கிடந்ததுள்ளது. இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், இறந்த நபரின் தலையின் பின் மண்டையில் சுத்தியால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

போலீஸ் விசாரணையில் சிக்கிய நண்பர்கள்!

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த காணாமல் போன கார்த்திக் என்பது தெரிய வந்தது.

மேலும், கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திகேயன் (24), தினேஷ்குமார் (29), மெர்சி கார்த்திக் (23) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவது வழக்கம் என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அன்னை சிவகாமி நகருக்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டில் பதுங்கி இருந்த கார்த்திகேயன், தினேஷ்குமார், மெர்சி கார்த்திக் ஆகிய மூன்று பேரை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!

கடந்த மாதம் சம்பவத்தன்று, இவர்கள் நான்கு பேரும் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு காரணமாக இறந்து போன கார்த்திக் மீது அவர் நண்பர்கள் மூன்று பேரும் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளனர். இதனால் கார்த்திக்கை கொலை செய்ய நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்

நண்பனை அடித்து கொலை செய்த இளைஞர்

அவர்களின் திட்டத்தின் படி கடந்த 5 ம் தேதி கார்த்திகேயன், கார்த்திக்கு போன் செய்து மது அருந்த அழைத்துள்ளார். இருவரும் அன்னை சிவகாமி நகர் தண்டவாளம் அருகே உள்ள காலி மைதானத்தில் மது அருந்தியுள்ளனர். மது போதை தலைக்கு மேல் ஏறியதும் சமயம் பார்த்து கார்த்திகேயன் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் கார்த்திக்கின் பின் மண்டையில் அடித்து, மர்ம உறுப்பை நசுக்கி உள்ளார். இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்த கார்த்திக்கின் உடலை வீடியோ எடுத்து, தினேஷ்குமார் மற்றும் மெர்சி கார்த்திக் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் கார்த்திகேயன், உடலை அங்கிருந்த மைதானத்தில் கிடந்த ஜல்லி கற்களை அடுக்கி மறைத்து வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.