உயிரிழந்த அமராவதி
உயிரிழந்த அமராவதி pt desk
தமிழ்நாடு

திடீரென ஏற்பட்ட மின்தடை... திருவாரூர் அரசு மருத்துவமனை வென்டிலேட்டரில் இருந்த பெண் உயிரிழப்பு

webteam

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த அமராவதி என்பவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் சேர்க்கப்பட்டார். சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வென்டிலேட்டர் மூலம் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

Hospital

இந்நிலையில், நேற்று பிற்பகல் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. அப்போது வென்டிலேட்டர் இயங்காததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அமராவதி இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமராவதியின் உறவினர்கள் மருத்துவர்களிடம் கேட்ட போது, ‘மருத்துவமனை நிர்வாகத்திடம்தான் கேட்க வேண்டும்’ என பதில் அளித்ததாக தெரிகிறது.

இவ்விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமராவதியின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே, மின்தடை ஏற்பட தாங்கள் காரணம் இல்லை என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மின்தடைக்கு பொதுப்பணித் துறையே காரணம் என்றும், 10 நிமிடங்களில் மின் விநியோகம் சீராகிவிட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.