பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி
பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி PT WEB
தமிழ்நாடு

பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக புகார் - அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு!

webteam

சென்னை கோட்டூர்புரம் பாரதி அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது தங்கை ஆண்டாள், பாஜகவில் மாவட்ட துணைத் தலைவியாகப் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்ததையொட்டி, சித்ரா நகர்ப் பகுதியிலிருந்து ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக ஆண்டாளுக்கும், அதே கட்சியைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர் என்பவர் மகளிர் அணியைச் சேர்ந்த நிவேதா உள்ளிட்ட மூன்று நபர்கள் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தேவி மற்றும் அவரது தங்கை ஆண்டாளைச் சரமாரி தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி ’அமர் பிரசாத் ரெட்டியிடம் இருந்து நீங்கள் வாங்கி வந்த பணத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும்’ எனக் கேட்டுள்ளனர். இதனை வெளியே சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த தேவியை அவரது உறவினர்கள் மீட்டு தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேவி பயத்தின் காரணமாக இரண்டு நாட்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து தேவியின் உறவினர்கள் அறிவுரையின் படி, அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர் மற்றும் பாஜக நிர்வாகி நிவேதா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பா.ஜ.க நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர், நிவேதா மற்றும் கஸ்தூரி உள்ளீட்டோர் மீது கோட்டூர் புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்ததுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.