udhayanidhi stalin meets pm modi pt
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை: திமுகவின் முடிவு என்ன..? பாஜகவின் கணக்கை மாற்றுமா திமுகவின் நிலைப்பாடு?

தொகுதி மறுவரையறை விவகாரம், தமிழ்நாட்டைத் தாண்டி தேசிய அரசியலிலும் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

Rishan Vengai

மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு இன்னும் 31 வாக்குகள் குறைவாக உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு தேசிய அரசியலில் கவனத்தை ஈர்க்கிறது. மக்கள் தொகை அடிப்படையிலான மறுவரையறை தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் என்ற அச்சம் திமுகவுக்கு உள்ளது. அதேசமயம், 2026க்குப் பிந்தைய தேசிய அரசியல் பங்கையும் திமுக கணக்கில் எடுக்கிறது.

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் தற்போது 3 இடங்கள் காலியாக இருப்பதால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 360 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸ், சிவசேனாவின் உத்தவ் அணியைச் சேர்ந்த உறுப்பினர்களின் ஆதரவுடன், என்டிஏவின் பலம் 329 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பெரும்பான்மைக்கு இன்னும் 31 வாக்குகள் குறைவாக உள்ளன. இதனால், தேவையான எண்ணிக்கையைப் பெறுவதில் திமுக உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு முக்கியமாகிறது. ஆனால், இங்குதான் பாஜகவுக்கு சிக்கல். மக்கள் தொகையை அடிப்படையாகக்கொண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் தங்களது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என்பது திமுகவின் முக்கிய வாதம்.

திமுக தலைவர் ஸ்டாலின்

இதனால், தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு திமுக ஆதரவளிக்குமா என்பது கேள்வியாகியுள்ளது. அதேநேரத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தேசிய அரசியலில் தனது நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டிய சூழலும் திமுகவுக்கு உள்ளது. எனவே, தொகுதி மறுவரையறை திமுகவுக்கு வெறும் தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்னை மட்டுமல்ல; தேசிய அரசியலில் தனதுபேரத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. பாஜகவுக்குத் தேவையான எண்கள் ஒருபுறம் இருக்க, அந்த எண்களில் திமுகவின் நிலைப்பாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதே அரசியல் வட்டாரங்களின் முக்கியக் கேள்வியாக உள்ளது.