உயிரிழந்த அண்ணாதுரை
உயிரிழந்த அண்ணாதுரை புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த 2 மனைவிகள்.. குடிபோதையில் இருந்த கணவனை கொன்ற முதல் மனைவி!

PT WEB

திருச்சி மாவட்டம் துறையூர் தேவாங்கர் நகர் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வந்தவர் அண்ணாதுரை(55). இவர் துறையூர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பத்மினி(50) என்ற முதல் மனைவியும், லலிதா(45) என்ற இரண்டாவது மனைவியும் உள்ளனர். இந்நிலையில், இருவரையும் ஒரே வீட்டில் தங்க வைத்து வந்துள்ளார் அண்ணாதுரை. வீட்டின் கீழ் தளத்தில் லலிதாவும், முதல் மாடியில் பத்மினியும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை அண்ணாதுரை குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும் அவரது முதல் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முதல் மனைவியான பத்மினி மற்றும் பத்மினியின் தம்பி மகள் சினேகா ஆகியோர் சேர்ந்து, அண்ணாதுரையை கீழேத் தள்ளியதில் அவர் மூர்ச்சையடைந்ததாக கூறப்படுகிறது. உடனே கையில் கிடைத்த நைலான் கயிற்றால் கணவனின் கழுத்தை, முதல் மனைவி இறுக்கியுள்ளார். இதில் அண்ணாதுரை சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

தொடர்ந்து, அவரது முதல் மனைவி கணவரைக் கொலை செய்துவிட்டதாக, இரண்டாவது மனைவியான லலிதா(45) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பத்மினியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையே அண்ணாதுரையின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.