கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி
கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி PT WEB
தமிழ்நாடு

நெசவுத் தொழிலாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ; மனைவியே கூலிப்படை வைத்து கொலை செய்தது அம்பலம்!

webteam

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாதிரிவேடு பகுதியில் நேற்று முன்தினம் பாலசுப்பிரமணி (43) என்ற நெசவுத் தொழிலாளி மாயமானதாக அவரது மனைவி புவனேஸ்வரி (38) என்பவர் பாதிரிவேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார்,உறவினர்கள் உதவியுடன் மாயமான நெசவுத் தொழிலாளி பலசுப்பிரமணியைத் தேடி வந்தனர்.

இந்தநிலையில் அவரது ஹெல்மெட் மற்றும் உடைமைகள் வீட்டின் அருகே உள்ள சின்னெரி குளம் ஏரி பகுதியில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஏரியின் பின்புறம் கரையை ஒட்டி புதியதாகப் பள்ளம் தோண்டப்பட்டது இருப்பதைப் பார்த்துள்ளனர்.

பலசுப்பிரமணி

இதனையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பள்ளத்தைத் தோண்டிய போது பலசுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் கைகள் உடைக்கப்பட்டு தலை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் பாலசுப்பிரமணி காணாமல் போனதாகப் பதிவு செய்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்தனர்.

பின்னர் தீவிர விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசாருக்கு, கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியின் மனைவி புவனேஸ்வரி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தியதில் ,"தான் தாயாரிடம் பேசுவதற்குக் கூட செல்போன் இல்லை; என் மீது சந்தேகப்பட வேண்டாம்" என புவனேஸ்வரி நாடகம் ஆடியுள்ளார். போலீசாரின் கிடிக்குப்பிடி விசாரணையில் புவனேஸ்வரியிடம் செல்போன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து புவனேஸ்வரியின், செல்போனின் அழைப்புகளை வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, புவனேஸ்வரியின் ஆண் நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த முத்து ஜெயம் (45) என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், புவனேஸ்வரிக்கும், அவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்துள்ளது. இவர்களுக்கு இடையூறாக இருந்த பலசுப்பிரமணியைக் கூலிப்படையை வைத்து இரவோடு இரவாகக் கொலை செய்து, அவரின் உடலை அருகில் உள்ள ஏரிக் கரையில் புதைத்ததும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள்

இதையடுத்து கொலைக்குக் காரணமான பலசுப்பிரமணியின் மனைவி புவனேஸ்வரி, முத்து ஜெயம் மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஹேமநாத் (22), இன்பராஜ் (22), என்.எஸ் நகரைச் சார்ந்த சுரேந்தர் (22) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த கொலைக்கு மூளையாக இருந்து செயல்பட்ட, பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்த பிரபு (30), சூர்யா (26) மாநல்லூரைச் சேர்ந்த அஜய் (23) பாலாஜி (23) ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.