ரமேஷ்- கிருஷ்ணவேணி
ரமேஷ்- கிருஷ்ணவேணி புதிய தலைமுறை
தமிழ்நாடு

தேனி: கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி

PT WEB

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(47). இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் கேரள மாநிலம் உடும்பன்சோலையில் வசித்து வந்துள்ளனர்.இவர்களுடைய மகன் கார்த்திக் போடியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார்.

தீபாவளி பண்டிகைக்காக ரமேஷ் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி இருவரும் போடிக்கு  வந்துள்ளனர். தீபாவளி முடிந்ததும் மகன் கார்த்திக் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

கிருஷ்ணவேணி

இதனிடையே ரமேஷ் நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டதாக, போடி நகர காவல் நிலையத்திற்கு அவரது மனைவி கிருஷ்ணவேணியே தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்து கிடந்த ரமேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர் போலீசார்.

இதனிடையே, இறந்த ரமேஷின் தாயார் தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போடி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதையடுத்து இன்று ரமேஷின் உடற்கூறு ஆய்வுக்கான அறிக்கை வெளியானது. அதில் ரமேஷ் தற்கொலை செய்யவில்லை என்றும், அவரது கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிய வந்தது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்பு ரமேஷின் உடல் நேற்று மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

இது குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், ரமேஷின் மனைவி கிருஷ்ணவேணியிடம்  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கிருஷ்ணவேணி தனது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் குடித்து விட்டு தினமும் தன்னுடன் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் என்றும் கூறியுளாளர். அத்துடன், சம்பவ நாளான நேற்று முன்தினம் இரவு தனது கணவர் வழக்கம்போல் குடித்துவிட்டு தன்னுடன் சண்டையிட்டதாகவும், ஒரு கட்டத்தில் போதையில், கதவை அடைத்துக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறியுள்ளார்.

இதில் கிருஷ்ணவேணியிடம் இருந்து வந்த பதில் போலீசாருக்கு திருப்தி அளிக்காததால் கிடிக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், பல  அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன் தினம் இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரமேஷுக்கும், அவரது மனைவி கிருஷ்ணவேணிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனைவி மது  போதையிலிருந்த  கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தூக்கிலிட்டுள்ளார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நாடகமாடியதும், போலீசாரின்  விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக  மரணத்தைக்  கொலை வழக்காகப் பதிவு செய்த போடி நகர் போலீசார்  கிருஷ்ணவேணியைக் கைது செய்தனர்.

மதுபோதையில் கட்டிய கணவனைக் கழுத்தை நெரித்து மனைவியே கொலை செய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.