விஜய் Pt web
தமிழ்நாடு

சுதந்திர தின விழாவில் கொடியேற்றும் முதல்வர் விஜய்.. தகைசால் தமிழர் விருது யாருக்கு?

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு சுதந்திர தின விழாவில் வழங்கும் தகைசால் தமிழர் விருதை யார் பெறுவார்கள் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

PT WEB

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசில் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் தகைசால் தமிழர் விருது நடப்பாண்டு யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய், முதல் முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைக்க உள்ளார். சுதந்திர தின விழாவின் முக்கிய நிகழ்வாக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தகைசால் தமிழர் விருது வழங்கப்படும். கடந்த திமுக அரசால் உருவாக்கப்பட்ட இந்த விருதினை இதுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான சங்கரய்யா, நல்லகண்ணு ஆகியோர் பெற்றுள்ளனர்.

தகைசால் தமிழர் விருதுடன் சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணு

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோருக்கும் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தகைசால் தமிழர் விருதுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதல்வர் வழங்குவார்.