சேலத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் சூரஜ் என்பவர் உயிரிழந்தார். அவருக்கு இதயம் சார்ந்த பிரச்னை இருந்ததாக கூறினாலும், அவரது நண்பர் மணிகண்டன், சூரஜுக்கு உடல்நலப் பிரச்னை இல்லை என தெரிவித்தார். சூரஜ் வெள்ளித் தொழிலாளி, விஜயை பார்ப்பதற்காக கூட்டத்திற்கு வந்தார் எனவும் கூறினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெகவின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம், சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கூடாது என காவல்துறை பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகளை விதித்தது.
இந்நிலையில் விதிமுறைகளின் படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் 12.30 மணியளவில் கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டம் நடைபெற்ற இடத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், பலர் வெயிலை தாங்கமுடியாமல் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவமுகாம்கள் மூலம், சிகிச்சை அளிக்கப்பட்டாலும் சூரஜ் என்பருக்கு வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். பிறகு அவர் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, அவர் செல்லும் வழிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் உயிரிழந்த 37 வயதான சூரஜ் என்பவர், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதும், 20 ஆண்டுக்கு மேலாக சேலத்தில் தங்கி வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளதாகவும், மேலும் இவருக்கு ஏற்கனவே, இதயம் சார்ந்த பிரச்னை இருந்து வந்ததும், ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக தகவல் வெளியானது.
மேலும் கூட்டத்தில் உயிரிழந்தவர் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த தவெக நிர்வாகி நிர்மல் குமாரும், இன்று தவெக சார்பில் சேலதில் நடைபெற்ற கூட்டத்தைக் காண வந்த சூரஜ் என்ற இளைஞர் திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி உள்ளார் அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யபட்டு கழக நிர்வாகிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது. இளைஞர் சூரஜின் இந்த எதிர்பாராத மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேம்” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த சூரஜின் நண்பர் மணிகண்டன் பேசுகையில், சூரஜ் வெள்ளித் தொழில் செய்கிறார், உருக்கும் தொழிலை செய்துவருகிறார். அவருக்கு ஒன்றும் பிரச்னை கிடையாது, விஜயை பார்ப்பதற்காகவே இன்று கூட்டத்திற்கு வந்தார். அங்கு போனபோது அவருக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது, இது எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. சம்பவம் கேள்விபட்டுத்தான் நான் இங்கு மருத்துவமனை வந்துள்ளேன்.
அவருக்கு எந்தவித உடல்நலப் பிரச்னையும் கிடையாது. அவர் என்னுடைய நண்பர் தான், அவருக்கு உடலில் எந்தவித பாதிப்பும் கிடையாது. டாக்டர்ஸ் என்ன சொல்றாங்கனு இன்னும் தெரியவில்லை, எனக்கும் அவருக்கும் 20 வருடமாக பழக்கம். என்ன ரிப்போர்ட்னு வந்ததான் எனக்கும் தெரியும் என பேசினார்.