தமிழக பாஜகவின் நட்சத்திர முகமாக,கடந்த நான்கு ஆண்டுகளாகக் களத்தில் அனல் பறக்கச் செயல்பட்ட அண்ணாமலை, திடீரென தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக பாஜகவின் நட்சத்திர முகமாக,கடந்த நான்கு ஆண்டுகளாகக் களத்தில் அனல் பறக்கச் செயல்பட்ட அண்ணாமலை, திடீரென தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பாஜக தொகுதி பொறுப்பாளர் பொறுப்பைவிட்டு விலக, தந்தையின் உடல்நிலையே காரணம் என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை. ஆனால், அதுமட்டும் காரணமில்லை என்கிறார்கள் பாஜகவின் உள்விவகாரம் அறிந்தவர்கள். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, 234 தொகுதிகளுக்கும் 72 பொறுப்பாளர்களை நியமித்தார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். பாஜக நேரடியாக போட்டியிட வாய்ப்புள்ள ஊட்டி, திருப்பூர் வடக்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு பொறுப்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகனும், சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளுக்கு பொறுப்பாளராக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதேபோல தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோருக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்தப் பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியிலேயே தங்கி, தொகுதி முழுக்க 2 முறையாவது பிரசாரம் செய்ய வேண்டும், அவ்வப்போது சக்தி கேந்திர நிர்வாகிகளைச் சந்தித்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. பாஜகவின் நட்சத்திர தலைவரான தன்னை வெறும் 6 தொகுதிக்குள் முடக்கும் முயற்சி இது என்று கருதியது அண்ணாமலை தரப்பு. தமிழக பாஜக தலைவராக பலர் பொறுப்பு வகித்திருந்தாலும்,கட்சியையும், கூடவே தனக்கான தனி செல்வாக்கையும் வளர்த்தெடுத்தவர் என்ற பெயர் அண்ணாமலைக்கு உண்டு.
பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக முன்னிறுத்துவதற்காக, அவர் மாநில தலைவராக இருந்தபோது அதிமுகவுடன் கடுமையாக முரண்பட்டார். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக தலைமையில் ஓர் அணி அமைக்கப்பட வேண்டும் என்பது, அவரது தரப்பின் விருப்பமாக இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், அவரது விருப்பத்துக்கு மாறாக அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டுவர விரும்பியது டெல்லி. அந்த கூட்டணி சுமுகமாக அமைவதற்காகவே அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் அப்போது பேச்சு எழுந்தது. மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன், அதற்கு இணையான அதிகாரமிக்க தேசிய அளவிலான பொறுப்புகள் அண்ணாமலைக்கு வழங்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 10 மாதமாகியும் அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாதது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், தனிப்பட்டக் காரணத்தால் 6 தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்திருப்பது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காகப் பணியைப் பாதியில் விடக்கூடியவர் அல்ல அண்ணாமலை என்பதால், இந்த விலகல் மூலம் பிரதமர் மோடி மற்றும்அமித் ஷாவிற்கு அவர் ஏதோ செய்தி சொல்ல விளைவதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அதிமுக கூட்டணியில் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளிலாவது, அதாவது குறைந்தது 70 தொகுதிகளில் பாஜக போட்டியிட வேண்டும் என்று விரும்பினார் அண்ணாமலை. ஆனால், 25 முதல் 30 தொகுதிகளுக்குள் பங்கீட்டை இறுதிசெய்ய பாஜக ஒப்புக்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால், அதிமுக - பாஜக கூட்டணிக்கு மறைமுக எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் பணிகளிலிருந்து அண்ணாமலை விலகி நிற்கிறாரா என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. அரசியல் களத்தில் தனக்கென்று தனி ஆதரவுத் தளத்தை உருவாக்கியுள்ள அண்ணாமலை, தனிக்கட்சி தொடங்க உள்ளதாக ஏற்கெனவே பேச்சுகளும் வலம்வந்தன.
அதே சமயம் விரைவில் அஸாம், குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், ராஜ்ய சபா எம்.பி. பதவியை எதிர்பார்க்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழக பாஜகவின் நட்சத்திர பிரசாரகரான அண்ணாமலையின் விலகல், தற்காலிகப் பின்வாங்கலா அல்லது அரசியலில் இருந்தே ஒரு இடைவெளியா என்பது பேசுபொருளாகியிருக்கிறது. இன்னொருபுறம் அண்ணாமலையை சமரசப்படுத்தும் முயற்சிகளும் தொடங்கியிருப்பதால்,அண்ணாமலையின் இந்த ஒத்துழையாமை போராட்டம் வெல்லுமா என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.