கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கடலில் கலந்த கச்சா எண்ணெய்.. சுற்றுச்சூழல் சீர்கேட்டால் மீனவர்கள் வேதனை.. அச்சத்தில் எண்ணூர் மக்கள்!

PT WEB

கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்னென்ன?

எண்ணூர் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதால்  ஒன்பது கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. அவை எவை என்று அறியலாம்.

சென்னை அருகே எண்ணூரில் சிபிசிஎல் உள்ளிட்ட பல்வேறு ஆலைகள் இருக்கின்றன. மிக்ஜாம் புயலின்போது இந்த ஆலைகளில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்  எண்ணூர் பகுதியில் கடலில் கலந்து வருகிறது.

இதன் காரணமாக எண்ணூர், காட்டுக்குப்பம், முகத்துவார குப்பம், சிவன்பட வீதி குப்பம், தாள குப்பம், நெட்டுகுப்பம், எண்ணூர் குப்பம், பெரிய குப்பம், சின்ன குப்பம், தசன் குப்பம்  ஆகிய ஒன்பது மீனவ கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.
தற்போதைய ஆய்வின்படி,  கொசஸ்தலை ஆறு முகத்துவாரத்திலிருந்து காசிமேடு துறைமுகம் வரை 20 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு கச்சா எண்ணெய் கலந்துள்ளதாக கடற்படை ஹெலிகாப்டர் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் சீர்கேடு.. கடலில் கலந்த கச்சா எண்ணெய்.. மீனவர்கள் வேதனை

மணலி சிபிசிஎல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கசடுகள் முழுவதுமாக பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரம், வங்கக்கடல் பகுதிகள் என நிறைந்து காணப்படுகிறது. பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் நீர்வளத் துறையும் எண்ணெய் கலப்பு தொடர்பாக இருவேறு கருத்துக்களை தெரிவித்த நிலையில், கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலம் நடத்திய ஆய்வில் எண்ணூர் கழிமுகத்தில் இருந்து காசிமேடு துறைமுகம் வரை 20 சதுர கிலோமீட்டருக்கு எண்ணெய் கசடுகள் பரவி இருப்பது தெரியவந்துள்ளது.

எண்ணூர் கழிமுகப் பகுதிகளில் டிசம்பர் ஜனவரி மாதங்களில் ஆயிரக்கணக்கில் வெளிநாட்டு பறவைகள் வரும் நிலையில் எண்ணெய் கலப்பால் பல பறவைகள் உயிரிழந்ததாக கூறுகின்றனர். மேலும் கழிமுகப் பகுதிகளில் வளரும் தாவரங்களும் கருகிய நிலையில் காணப்படுகிறது. 

டிசம்பர் மாதத்தில் கடலின் நீரோட்டம் வடக்கில் இருந்து தெற்காக செல்லும் என்பதால் எண்ணெய் கசடுகள் மேலும் தென் சென்னை கடற்கரைகளை ஒட்டி உள்ள ஈசிஆர் பகுதிக்கும் பரவ வாய்ப்புள்ளதாக சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில் மீனவர்கள் சார்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாயன்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் CPCL, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அறிக்கை
சமர்ப்பிக்கப்பட உள்ளது.

கச்சா எண்ணெய் கசிவு எண்ணூர் பகுதியில் எப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்துகிறது?

பல்லுயிர்களின் உறைவிடமான கடல் மாசுபடும்போது உயிர்ச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இருக்கிறது. கச்சா எண்ணெய் கசிவு எண்ணுர் பகுதியில் எப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தும் என்று  சூழலியல் செயல்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமனிடம் கேட்டபோது அவர் விவரித்தவை, இதன் மறுபக்கத்தை விவரிப்பதாக இருக்கிறது.