தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதிய கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கனவே தான் ஆரம்பித்திருந்த வீ த லீடர்ஸ் என்னும் அமைப்பில் தனது ஆதரவாளர்களை இணையும் படி கூறினார். அப்போது, இந்த அமைப்பு சமூக இயக்கமாக இருக்கும் எனவும், பிறகு அரசியல் கட்சியாக மாற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அண்ணாமலையின் வேண்டுகோளையடுத்து, அந்த அமைப்பில் இணைவோரின் எண்ணிக்கை 19 லஞ்சத்தை கடந்து அதிகரித்து வருகிறது.
இந்தசூழலில் தான், வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு ’போதையில்லா தமிழகம்’ என்ற தலைப்பையில் கோயம்புத்தூர் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, போதைக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை மேடையில் பேசினார்.
அண்ணாமலை பேசுகையில், இது ஒரு அரசியல் மாநாடு அல்ல; சமூக மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட மக்கள் இயக்கம் என வலியுறுத்தினார். போதைப்பொருள் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அடுத்த ஆறு மாதங்களுக்கு திட்டமிட்டு செயல்பட இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து, இந்த இயக்கம் தொடங்கி 38 நாட்களில் 19 லட்சம் பேர் இணைந்துள்ளதாகவும், யாரையும் தனிப்பட்ட முறையில் அழைக்காமல் மக்கள் தாமாகவே இணைந்திருப்பது சமூக மாற்றத்திற்கான நல்ல அறிகுறி என்றும் கூறினார். 50 லட்சம் பேர் தன்னார்வமாக இணையும் நிலை உருவானால், அது தமிழக மக்கள் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமாக இருக்கும் என்றார்.
மேலும், "இந்த இயக்கம் அதிகாரத்தைப் பிடிப்பதற்கான அமைப்பு அல்ல; நல்ல சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம். 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதேபோல, 2031-ஆம் ஆண்டில் மேலும் ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்கும். தலைமுறையை உருவாக்கும் பணியில் இந்த இயக்கம் ஈடுபடும். இயக்கம் தற்போது அரசியல் கட்சியாக இல்லையென்றாலும், எதிர்காலத்தில் சரியான நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தான் தேசியவாதியாக இருப்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்த அண்ணாமலை, தமது மதம், ஜாதி ஆகியவை தனிப்பட்டவை என்றும், சமூகப் பணியில் அனைவரையும் சமமாகக் கருதி செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், “என் மண் என் மக்கள்” தொழிற்சங்க பேரவையும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்கள் அதில் இணைந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார். சட்டமன்றத் தொகுதி வாரியான செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் “வீ த லீடர்ஸ்” செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.