தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுவந்தது. ஆனாலும், 8 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி திமுக - விசிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து, 8 தொகுதிகளுகான விசிக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி வெளியிட்டார். ஏற்கனவே, திருமாவளவன் சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2 ஆண்டுகளை மட்டுமே நிறைவு செய்திருக்கும் நிலையில், சட்டப்பேரவைத் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்தது அரசியல் களத்தில் பேசுபொருளானது.
இந்த சூழலில் தான், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், கூட்டணி ஏற்படும் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக தான் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்தார். தொடர்ந்து, காட்டுமன்னார் கோவிலுக்கான மாற்று வேட்பாளராக மறைந்த தலைவர் இளையபெருமாள் மகன் ஜோதிமணியை வேட்பாளராக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, திமுகவின் அழுத்தத்தின் காரணமாகவே திருமாவளவன் தனது முடிவில் இருந்து பின்வாங்கியிருக்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதற்கிடையில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறுகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் உள்ள விசிகவிற்கு உழவர்கரைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள சூழலில் அத்தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் செல்வபுஷ்பலதாவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்கான இன்று புதுச்சேரி சென்றார்.
அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், திமுக காங்கிரஸ் கூட்டணியில் விசிகவிற்கு ஒதுக்கியுள்ள உழவர்கரைத் தொகுதியில் மட்டுமே போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, உழவர்கரைத் தொகுதியில் மட்டுமே விசிக வாக்கு சேகரிப்பில் ஈடுபடும். அதேபோல, ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனாம் போன்ற தொகுதிகளில் விசிக வேட்புமனு தாக்கல் செய்திருந்தாலும், அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபடப்போவதில்லை. அந்தத் தொகுதியில், கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தாலும், புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடபோவதாக தெரிவித்திருந்த விசிக தலைவர் திருமாவளவன், இன்று புதுச்சேரியில் காங்கிரஸ் ஒதுக்கிய உழவர்கரை தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதாக தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே, காட்டுமன்னார் கோவிலில் தான் போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டு பின்னர் தான் போட்டியிடவில்லை என திருமாவளவன் கூறியிருந்த நிலையில், இன்று புதுச்சேரியில் உள்ள 3 தொகுதிகளில் விசிகவிற்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.