செய்தியாளர்: A.மணிகண்டன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குருலிங்காபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சீத்தாராம் (26). இவர், எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சீத்தாராம் இன்று என்.ஜி.ஓ காலனியில் உள்ள கால்நடை மருத்துவர் சுப்புராஜ் என்பவரது வீட்டில் மின்சார வயரிங் பணி செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து மயங்கியுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சீத்தாராம் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணி செய்து கொண்டிருந்த போது எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.