ராகுல் காந்தி - Village Cooking Channel
ராகுல் காந்தி - Village Cooking Channel புதிய தலைமுறை
தமிழ்நாடு

“அன்பான மனிதன் ராகுல் அண்ணா மீது அவதூறு பரப்புவது மன வருத்தத்தை தருகிறது” - Village Cooking Channel

ஜெனிட்டா ரோஸ்லின்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்களால் கடந்த 2018-ல் உருவாக்கப்பட்ட யூ-ட்யூப் சேனல், வில்லேஜ் குக்கிங் சேனல். இந்த சேனலின் குக்கிங் குரு, பெரியதம்பி என்ற தாத்தா. சமையல் ஆர்வமுள்ள இளைஞர்களை தன்னோடு இணைத்துக்கொண்டு மண் மனம் மாறாத கிராமத்து சமையலை செய்துவந்தார் தாத்தா. இவர்களின் சமையல் வீடியோக்கள்யாவும், தற்போது மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று, தெறிக்கவிட்டு கொண்டு இருக்கிறது.

இவர்களை கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில் நேரில் சந்தித்திருந்தார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி.
Village Cooking Channel குழுவினருடன் ராகுல் காந்தி

அவர்களோடு அமைர்ந்து, அவர்களுக்கு காளான் பிரியாணி சமைக்க ராகுல் காந்தி உதவிய வீடியோ இன்றுவரை ட்ரெண்டிங்தான். அந்த வீடியோவில், அவர்கள் பேசுவது போலவே கொஞ்சும் தமிழில் ஒவ்வொரு உணவுப்பொருட்களின் பெயர்களை சொல்லி வெங்காய ரைத்தா வைத்திருப்பார் ராகுல்! பின் தன் பாரத் ஜோடா யாத்திரையின் போதும் (2022-ல்) அவர்களை சந்தித்திருந்தார் ராகுல் காந்தி.

இந்நிலையில், சமீபத்தில் வில்லேஜ் குக்கிங் சேனலில் சமைக்கும் பெரியதம்பி தாத்தாவிற்கு இதய நோய் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் நலமாக இருக்கிறார்.

இதற்கிடையே தாத்தாவின் இதய சிகிச்சைக்கு வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்தவர்கள் ராகுல் காந்தியிடம் உதவி கேட்டனர் என்றும், அதற்கு ராகுல் காந்தி, ’இப்படியெல்லாம் என்னை தொந்தரவு செய்யக்கூடாது’ என்று கராராக கூறிவிட்டார் என்றும்கூறி சமூக வலைதளத்தில் சிலர் வீடியோ பரப்பி வந்தனர்.

அந்த வீடியோ முற்றிலும் பொய்யானது என்றும் இப்படி வதந்திகளை பரப்பவேண்டாம் என்றும் வில்லேஜ் குக்கிங் யூ-ட்யூப் சேனல் தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது குறித்து தங்களின் சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள வில்லேஜ் குக்கிங் சேனலின் சுப்ரமணியன் வேலுச்சாமி, ”இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்!” என்று பதிவிட்டுள்ளனர்.