தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பிய நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடத்தினார். இந்த மாநாட்டிற்கு கூடிய கூட்டம், கூட்டணி ஆட்சி பற்றிய விஜய் பேச்சு உள்ளிட்டவற்றால் பெரிய அளவில் அப்பொழுது பேசப்பட்டது.
இந்நிலையில், தவெகவின் இரண்டாவது மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, மாநாட்டுக்கு அனுமதி கோரி தவெகவினர் அணுகிய போது, விநாயகர் சதுர்த்தி வருவதால் மாநாட்டுக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதனால், மாநாட்டு தேதியில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தவெக இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,
“கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 25ஆம் தேதி (25.08.2025) மதுரையில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.
ஆனால், மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால். காவல் துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது என்றும், எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல் துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில், கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 21ஆம் தேதி (21.08.2025) வியாழக்கிழமை அன்று, மாலை 4.00 மணி அளவில் ஏற்கெனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கான பணிகள். ஏற்கெனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கழகத் தோழர்கள் வரும் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேதி மாற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதால் தவெக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.