விஜய் pt web
தமிழ்நாடு

தஞ்சாவூர் | மார்ச் 4 விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு.. அனுமதி கோரி கடிதம்!

சேலம் மற்றும் வேலூரைத் தொடர்ந்து, மார்ச் 4-ஆம் தேதி தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜயின் நிர்வாகிகள் சந்திப்புக்கு அனுமதி கோரி தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாவுள்ள நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. ஆட்சியில் பங்கு தருவதாக அறிவித்தும், எந்தக் கட்சிகளும் தவெக கட்சியுடன் கூட்டணி வைக்காத நிலையில், தனித்துப் போட்டியிடுவதற்கு தவெக தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் தான், தவெக தலைவர் விஜய் சமீபத்திய கூட்டங்களில் பேசியபோது, ”எங்களுக்கு மக்களுடன்தான் கூட்டணி” என்பதை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இது, தவெக ஏறத்தாழ தனித்து களம் காணவே வாய்ப்பிருக்கிறது எனப் பார்க்கப்படுகிறது.

விஜய்

இந்த சூழலில், தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகு, விஜயின் மக்கள் சந்திப்புக் கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் அதிகரித்து இருப்பதாக கூறப்படும் நிலையில், ”எங்களின் பொதுக்கூட்டங்களுக்கு காவல்துறையினர் அனுமதி தர மறுக்கின்றனர்” என தவெக நிர்வாகிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

கடைசியாக, பிப்ரவரி 13-ஆம் தேதி சேலத்திலும், பிப்ரவரி 23-ஆம் தேதி வேலூரிலும் தவெக தலைவர் விஜயின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் மார்ச் 4-ஆம் தேதி தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவிற்கும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு அனுமதி கோரி தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் கடிதம் அளித்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய்

இந்தக் கடிதத்தில், மார்ச் 4-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள 9 ஏக்கர் பரப்பளவு தனியார் திடலில், காலை 10 மணி முதல் 3 மணி வரை நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த சுமார் 4,900 நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்தக் கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது.