தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. திமுக, அதிமுக, நாதக ஆகிய கட்சிகள் ஏற்கனவே களத்தில் உள்ள சூழலில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். ஏற்கனவே, தவெக பரப்புரைக்கு காவல்துறை அனுமதி கொடுக்க மறுக்கிறது என அக்கட்சியின் தொண்டர்கள் தொடர்ந்து கூறி வந்த நிலையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதற்குப் பிறகு, விஜய் தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபடுவார் எனக் கூறிவந்தார்.
எனினும், மார்ச் 30-ம் தேதி பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய் , அன்றைய தினமே பரப்புரையைத் தொடங்கிய நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சென்னையில் தி.நகர் மற்றும் வில்லிவாக்கத்தில் அதிகப்படியான நிபந்தனைகள் காரணமாக காவல்துறை அனுமதியளித்தும் தவெக தரப்பில் இருந்து அன்றைய தின பரப்புரை ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், திருச்சி கிழக்கு தொகுதியில் மனு தாக்கல் செய்த விஜய், அங்கு மட்டும் பரப்புரை செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 8-ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சாலைவலம் மற்றும் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.
ஏப்ரல் 9-ம் தேதி கடலூரில் பரப்புரை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையும் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், அன்றைய தினம் கடலூர் அருகில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்றதால், பரப்புரை ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று காரைக்குடியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். ஆனால், பரப்புரைக்கு அனுமதி கொடுத்த இடத்தை சரியான நேரத்தில் அடைய முடியாத நிலையில், சாலை வலம் மட்டுமே மேற்கொண்ட அவர், உரை நிகழ்த்தாமலேயே திரும்பி சென்றிருக்கிறார்.
இந்த சூழலில் தான், கடலூரில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவிருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இரண்டாவது முறையாக கடலூர் பரப்புரை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, நாளை நடைபெறவிருக்கும் கும்மிடிப்பூண்டி பரப்புரையும் ரத்து செய்யப்படுவடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான மாற்றுத் தேதி ஏப்ரல் 19 என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தான் இன்று ஏற்கனவே, அறிவிக்கப்பட்டபடி இன்று கன்னியாகுமரியில் தவெக தலைவர் விஜய் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். முதலில் விவேகானந்தா கல்லூரியில் பேச அனுமதி கோரி இருந்த நிலையில் அந்த அனுமதி அதற்கு காவல் துறை அனுமதி வழங்கி இருந்தது. ஆனாலும், விஜயின் பொதுக்கூட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலைமார்கமாக ரோடு ஷோக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் பேச தமிழக வெற்றி கழகம் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மகாதானபுரம், மற்றும் கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் உள்ளிட்ட இரண்டு இடங்களில் வாகனத்தில் இருந்தபடி பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி கேட்ட நிலையில் தற்போது குமரி எஸ் பி ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளார். மதியம் 2 மணி முதல் 8 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இப்பரப்புரையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வேட்ப்பாளராக பெர்வின் கிங்க்ஸ்,குளச்சல் வேட்பாளர் பிரேம் அலெக்ஸ் லாரான்ஸ்,பத்மநாபபுரம் வேட்பாளர் கிருஷ்ணகுமார், விளவங்கோடு வேட்பாளர் மைக்கில் குமார் , கிள்ளியூர் வேட்பாளர் சபின் மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர் மாதவன் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து விஜய் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.
இன்று காலை விஜய் தனது வீட்டில் இருந்து கிளம்பியிருக்கும் நிலையில், தனி விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் அவர் சாலை வழியாக கன்னியாகுமரி சென்றடைகிறார்.