ரவிக்குமார் Pt web
தமிழ்நாடு

”விஜய் அதிமுகவை சேர்த்துக் கொள்ள முடியாது” - விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார்!

பாஜகவை கொள்கை எதிரி என கூறிய விஜய், கூட்டணி கட்சியாக அதிமுகவை சேர்க்க முடியாது என்றும் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசை அமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்கள் வென்றும் பெரும்பான்மை எண் எட்டாத விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, காங்கிரஸ் ஆதரவால் எம்.எல்.ஏ.க்கள் 113ஆக உயர்ந்துள்ள நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் கூட்டணி, மதச்சார்பற்ற ஆட்சிக்கே தீர்ப்பு அளித்துள்ளதாக விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் கூறி, இறுதி முடிவை திருமாவளவன் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. எனினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்தசூழலில் தான், சட்டப்பேரவைத் தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் ஆதரவளிக்கப்போவதாக இன்று தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, தவெக ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 113ஆக உயர்ந்திருக்கிறது.

தவெக - காங்கிரஸ்

எனினும், இன்னும் பெரும்பான்மையை நிரூபிக்க 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் தான், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக தரப்பில் இருந்து கடிதம் அனுப்பட்டிருக்கிறது. இந்தக் கட்சிகள் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கும் நிலையில், நாளைக்குள் அக்கட்சிகளின் நிலைபாடு என்ன என்பது தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தசூழலில் தான், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும், விசிக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமாரிடம் தவெகவிற்கு விசிக ஆதரவளிக்குமா என்ற கேள்வி உட்பட பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், ”தமிழ்நாட்டு மக்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதை மதிக்க வேண்டியது அரசியல் கட்சியின் கடமை. தேர்தல் முடிவை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழிந்த கூட்டணி ஆட்சி என்கிற முடிவை மக்கள் எடுத்து இருக்கிறார்கள். அதேபோல, பாஜகவிற்கு எதிரான முடிவையும் எடுத்திருக்கிறார்கள். மதச்சார்பற்ற ஆட்சிக்கும் கூட்டணி ஆட்சிக்கும் ஆன முடிவாக இது இருக்கிறது.

VCK MP - D Ravikumar

விடுதலை சிறுத்தைகள் ஆதரவை கேட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் கடிதம் வந்திருக்கிறது. என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை திருமா அறிவிப்பார்.  அதிக இடங்களை வென்ற கட்சியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அந்த வகையில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றி கழகம் உரிமை கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும். இதுதான் வழக்கமான நடைமுறை. அதை ஆளுநர் பின்பற்றுவார் என எதிர்பார்க்கிறோம். இந்த தேர்தலிலே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். யாருக்கு ஆதரவு என்கிற முடிவை திருமாவளவன் முடிவை கூறுவார்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, அதிமுகவோடு தமிழக வெற்றி கழகம் சேர்வது தான் சரியாக இருக்கும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ”அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கிறார்கள். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மக்கள் தீர்ப்புக்கு எதிராக அமையும். திமுக எப்படி மதச்சார்பற்ற கொள்கை நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறதோ அதேபோன்று தான் தமிழக வெற்றிக் கழகமும் கொள்கை எதிரி என பாஜகவை கூறியிருக்கிறார்கள். இந்தசூழலில், கொள்கை எதிரி என கூறிய கட்சி, கூட்டணி கட்சியாக சேர்க்க முடியாது. விஜய் அவ்வாறு செய்ய மாட்டார் என நம்புகிறோம். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசை அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.