விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்  pt web
தமிழ்நாடு

பிரதமர் மோடி உரை - “அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” - திருமாவளவன்

விமல் ராஜ்

நாகர்கோவிலில் நடக்கக்கூடிய கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் சென்றிருந்தார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாகத் தமிழகம் வந்துள்ளார். பல்லடத்தில் அவர் பேசியபோது, கடந்த 10 ஆண்டுகளில் அவர் மக்களுக்குச் செய்தது என்ன என்பது பற்றி பெரிதாகக் குறிப்பிடவில்லை. 10 ஆண்டுகளில் இந்த நாடு என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறது, என்ன வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களைப் புகழ்ந்து பேசுவது எனத் தனது உரையை அமைத்துக் கொண்டார்.

பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் கொள்கைகளைப் பேசி தன்னுடைய கட்சிகளை வளர்க்க வேண்டும் என பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கக்கூடிய திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை விமர்சிப்பது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களின் புகழைப் பேசுவது போன்ற யுக்தியைக் கையில் எடுத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவையும் நம்பித்தான் அரசியல் பண்ண முடியும் என்ற நிலைக்கு பிரதமர் மோடி வந்துவிட்டார் என்பதைதான் அவரது பல்லடம் உரை நமக்கு உணர்த்துகிறது.

எம்.ஜிஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்தால் அதிமுகவின் ஓட்டை பெற முடியும் என நினைக்கிறார்கள். இதன் மூலம் அதிமுகவைப் பலவீனப்படுத்த வேண்டும், வாக்கு சதவிகிதத்தைச் சரியச் செய்ய வேண்டும் என பாஜக கணக்குப் போடுகிறது. அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

EX CM எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா

திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடிய நிலை வந்தால் தமிழ்நாட்டிற்குப் பெரிய தீங்கு விளையும். இதைத் தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக அதிமுக தொண்டர்கள் உணர வேண்டும். அதிமுக தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தொகுதிப் பங்கீடு குறித்து, ஓரிரு நாட்களில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும்” என்றார்.