விசிக ரவிக்குமார் முகநூல்
தமிழ்நாடு

’ரஜினிகாந்த் அவர்களை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான்...’-விஜய் பேச்சுக்கு விசிக ரவிக்குமார் பதிவு!

" திரு ரஜினிகாந்த் அவர்களை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் திரு விஜய் அவர்களைக் கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்வார்கள் . " - விசிக ரவிக்குமார்

ஜெனிட்டா ரோஸ்லின்

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல், நேற்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட, முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார்.

இதில் பேசிய விஜய், தமிழக அரசை
விமர்சித்தநிலையில், கூட்டணி கட்சிகளின் அழுத்தம்
காரணமாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புத்தக வெளியீட்டிற்கு வரவில்லை என்றும், திருமாவளவனின் மனது இனி எப்போதும் நம்முடன் தான் இருக்கும்
எனவும் கூறினார். தவெக தலைவர் விஜய்யின் இப்பேச்சு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை பற்றவைத்துள்ளது.

விசிகவின் துணைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா,” தமிழகத்தை, கருத்தியல் தலைவர்கள்தான் ஆள வேண்டும் . 2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும்” என்று பேசி இருந்தார். இவரின் இந்த பேச்சும் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக விசிக எம்.பி.ரவிக்குமார் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், ”அரசியல் ஒப்பனையின் ஆயுள்

தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்கள் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட திரு விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது.

தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து ‘அழைப்பு’ விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. இதையெல்லாம் பார்க்கும் எவரும், திரு ரஜினிகாந்த் அவர்களை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் திரு விஜய் அவர்களைக் கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்வார்கள் .

‘விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே’ என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி கே.சந்துரு அவர்களிடம் Alibi என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது! ” என்று பதிவிட்டுள்ளார்.