தமிழக அரசியலில் ஆட்சி அதிகார கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது. விசிக ஆட்சி அதிகார கோரிக்கையை கைவிடவில்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். காங்கிரஸ், திமுக கூட்டணியில் ஆட்சி பங்குக்கான கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காணும் என திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டபேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ’ஆட்சியில் பங்கு’ என்ற கோட்பாடுதான் தமிழக அரசியல் சூழலில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. கூட்டணி ஆட்சி குறித்து விசிக உள்ளிட்ட கட்சிகள் கடந்தகால அரசியலில் பேசியிருந்தாலும், தவெக தலைவர் விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில், ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்ற கோட்பாட்டை அறிவித்தார். அதிலிருந்தே மற்றக் கட்சிகளிடையே இக்கோரிக்கை மீண்டும் வலுத்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, இக்கோரிக்கையை திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், திமுக அதை பரிசீலனைகூட செய்யவில்லை. இந்நிலையில், அக்கட்சியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரல்கள் பரவலாக எழ ஆரம்பித்திருக்கின்றன. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், ’ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அக்கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் சிலர், திமுக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைக்கு ஒத்துவரவில்லை எனக் கூறினால் வெற்றியோ தோல்வியோ விஜயுடன் கூட்டணி வைக்கலாம் எனப் பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நேற்றைய தினம், காங்கிரசின் அகில இந்திய தலைமைக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையுடன் கூட்டாக மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. அதேபோல, இன்று தமிழக வந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை வரவேற்க சென்னை விமான நிலையம் சென்ற காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் ”ஆட்சியில் உறுதியான பங்கு வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி நின்ற சம்பவமும் அரங்கேறியிருக்கிறது. இந்தச் சூழலில், திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இந்த நிலையில்தான், இன்று சென்னை விமான நிலையம் வந்த விசிக தலைவர் திருமாவளவனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பட்டது. அப்போது, அவர் பேசுகையில், விசிக தொடங்கப்பட்டதிலிருந்து ஆட்சி அதிகாரம் என்பது எங்களின் கோரிக்கையாகவும் இருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற சூழல் இல்லை. விசிக ஆட்சி அதிகார கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் கைவிடவும் இல்லை. ஆட்சியில் அதிகாரம் கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பாளர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், அது முடிவு அல்ல. காங்கிரஸ் தேசிய தலைமைதான் இறுதி முடிவு செய்யும் என்பது அனைவருக்கும் தெரியும். திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும். இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்வை காண்பார்கள்” என்றார்.