விஜய் x
தமிழ்நாடு

சேலம்| விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு.. மரணித்தவர் விவரம் வெளியீடு!

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒருவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Premkumar S

சேலத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் பலர் மயக்கமடைந்தனர். இதில் சூரஜ் என்பவர் வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் உள்ளிட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்திவருகின்றன. அந்தவகையில் தான், இன்று சேலம், சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தவெகவின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அவருக்கு, மாநாடு நடத்த 12 மணி முதல் 3 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும், குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிப்பெண்கள் இக்கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை.

சேலம் மாவட்டத்தில் நடந்த தவெக பரப்புரை

இந்த நிலையில் தான், இக்கூட்டத்தில் 12.30 மணியளவில் விஜய் பேசத் தொடங்கினார். அதேசமயம், கூட்டம் நடைபெற்ற இடத்தில் கடுமையான வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பலர் வெயிலின் தாக்கம் தாங்காமல் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவமுகாம்கள் மூலம், சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சூழலில் தான், சூரஜ் என்பருக்கு வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். பிறகு அவர் மயங்கிய நிலையில், அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது, அவர் வழிலேயே உயிரழந்தது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, கரூர் தவெக பரப்புரையில் 41 பேர் கூட்ட நெரிசல் காரணமாக உயிரழந்தனர். இதையடுத்து, 1 மாதத்திற்கு மேலாக தவெக கூட்டம் நடத்த அனுமதி கிடைக்காமல் இருந்து வந்தது. தொடர்ந்து, தவெகவினரும் அசாம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க கவனமாக பொதுக்கூட்டங்களை கையாண்டு வந்தனர். இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் தவெகவைச் சார்ந்த சூரஜ் என்பவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தவெக பொதுக்கூட்டம்

உயிரிழந்தவர் யார்?

தவெக கூட்டத்தில் உயிரிழந்துள்ள 37 வயதான சூரஜ் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதும், 20 ஆண்டுக்கு மேலாக சேலத்தில் தங்கி வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மேலும், இவருக்கு ஏற்கனவே, இதயம் சார்ந்த பிரச்னை இருந்து வந்ததும், ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.