மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, திமுகவின் உதயநிதி பேச்சை சுட்டிக்காட்டி, ஜனநாயகத்தில் யாரும் பயப்பட தேவையில்லை என கூறினார். இதற்கு பதிலளித்த உதயநிதி, மோடி எங்களிடம் பயப்பட வேண்டாம் என கூற வேண்டாம், அவர்கள் பின்னால் இருக்கும் கூட்டத்திடம் சொன்னால் போதும் என தெரிவித்தார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் பரபரப்பாக மாறிவருகிறது. ஆளும் திமுக அவர்களின் கூட்டணியை பலப்படுத்தி வரும் நிலையில், எதிரணியாக இருக்கும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி திமுகவை வீழ்த்தும் வேலைகளை செய்துவருகிறது.
இந்நிலையில் இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் என தீவிர முயற்சியில் பாஜக ஈடுபட்டுவரும் நிலையில், பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
இந்தசூழலில் சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார்.
மதுரை பொதுக்கூட்டத்தில் உதயநிதியின் பேச்சை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, என்னிடமும் என் தந்தை இடமும் பயமில்லை என்று திமுகவில் யாரோ ஒருவர் அண்மையில் பேசினார் என்று கேள்விபட்டேன். நான் தெளிவாக ஒன்றை கூறிக்கொள்கிறேன் ஜனநாயகத்தில் யாரும் யாருக்கும் பயப்பட தேவையில்லை, அஞ்சத்தேவையில்லை. அதனால் யாராவது என்னிடம் பயமில்லை என்று கூறினால், அவர்கள் என்னை விமர்சிக்கவில்லை. மாறாக ஜனநாயக நன்மதிப்புகள், விழுமியங்களிடம் எனக்கிருக்கும் அர்ப்பணிப்பை உள்ளபடியே அவர்கள் பாராட்டுகிறார்கள் என்று தான் அர்த்தம். பாவம் தெரியாத்தனமாக அவர்கள் எனக்கு பாராட்டு பத்திரம் வழங்கிவிட்டார்கள் என பேசியிருந்தார்.
இந்தசூழலில் மோடியின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக நேற்று நடந்த நிகழ்வில் பேசிய உதயநிதி, பாஜகவால் மிரட்டி சேர்க்கப்பட்ட கட்சியை தவிர வேறு யாரும் அதிமுக கூட்டணியில் சேரவில்லை. நேற்று நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பெரியாரின் புகைப்படத்தை வைத்திருந்தார்கள், பின் அதை நீக்கி விட்டார்கள். முரட்டு பக்தர்கள் போல முரட்டு அடிமை எடப்பாடி. அதிமுகவில் அண்ணாவின் பெயரை மாற்றி அமித்ஷாவின் பெயரை வைக்க சொன்னாலும் எடப்பாடி உடனே வைத்து விடுவார்.
பிரதமர் நேற்று ED-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டேன் என முன்பு நான் பேசிய வார்த்தையை குறிப்பிட்டு பேசினார், என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம் என பிரதமர் எங்களிடம கூற வேண்டாம், பின்னே திரும்பி உள்ள கூட்டத்திடம் சொன்னால் போதும் என தெரிவித்தார்.