பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியுள்ள தேர்தலாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 இருக்கிறது. 1977-க்குப் பிறகு திமுக அல்லது அதிமுகவே தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துவந்த நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு இரு கட்சிகளுக்கும் மாற்றாக தவெக வெற்றியடைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றிருக்கிறார். பெரும்பாலான தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் திமுகவே இரண்டாவது முறை வெற்றி பெறும் எனத் தெரிவித்திருந்த நிலையில், இத்தேர்தல் முடிவு கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கி மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கிறது.
மேலும், எம்.ஜி.ஆர்-ஆல் உருவாக்கப்பட்ட அதிமுக மூன்றவது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் தான் போட்டியிட்ட தொகுதியான கொளத்தூரிலேயே தோல்வியடைந்திருக்கிறார். அதேபோல, அன்பில் மகேஸ், துரை முருகன், டி.ஆர்.பி ராஜா, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பல திமுக முன்னாள் அமைச்சர்களும் தோல்வியைச் சந்தித்து இருக்கின்றனர். இந்தசூழலில் தான், விஜய் தலைமையிலான தமிழக அரசின் சட்டப்பேரவை நாளை காலை கூடுகிறது.
இந்நிலையில், இன்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மே 7 மாலை 5.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, துணைத் தலைவராக கே.என்.நேருவும், கொறடாவாக எ.வ.வேலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” எனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகிறார். ஏற்கனவே, திமுகவில் பெரும்பாலான மூத்த தலைவர்கள் இல்லாத சூழலில், விஜய் எதிர் உதயநிதி யுகம் தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.