ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை web
தமிழ்நாடு

நெல்லை ஆணவக் கொலை |குற்றவாளியின் பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் சஸ்பெண்ட்!

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் பட்டப்பகலில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றொர்களான சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Rishan Vengai

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இத்தம்பதிக்கு சுர்ஜித் (24) என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இதற்கு முன் சரவணனின் குடும்பத்தினர் தூத்துக்குடியில் இருந்தபோது அவரது மகள் படித்த பள்ளிக்கூடத்தில் கவின் குமார் (26) எனும் இளைஞர் படித்திருக்கிறார். ஏரல் அருகேயுள்ள ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்தவர் கவினுக்கும், சப்-இன்ஸ்பெக்டர் சரவணனின் மகளுக்கும் இடையே பள்ளிப்படிப்பின்போதே பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின்..

இந்நிலையில் தற்போது சென்னையிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் கவின்குமார் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், அடிக்கடி பாளையங்கோட்டைக்கு வந்து தனது காதலியை சந்தித்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் காதலுக்கும் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இத்தகைய சூழலில்தான் நேற்று மதியம் கவின்குமாரின் தாத்தாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரும் அவரது குடும்பத்தினரும் தாத்தாவை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்திருக்கின்றனர்.

ஐடி ஊழியர் கவின்

இதனை எப்படியோ அறிந்துகொண்ட அப்பெண்ணின் தம்பி சுர்ஜித், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த கவின்குமாரை பேச அழைத்துள்ளார். திடீரென அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த சுர்ஜித் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியிருக்கிறார். படுகாயமடைந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடலை வாங்க மறுத்து போராட்டம்..

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கவின் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தபோது கவின்குமார் மீது தாக்குதலில் ஈடுபட்டது சுர்ஜித்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. கவினைக் கொன்றதாக சுர்ஜித் சரணடைந்த நிலையில், அவரது பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையிலிருக்கும் முக்காணி எனும் இடத்தில் கவினின் உறவினர்கள் நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் இன்று அரசு சார்பில் முதல்கட்டமாக வழங்கப்படவிருந்த 6 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழக்கின் விசாரணை அதிகாரியும் பாளையங்கோட்டை உதவி ஆணையருமான சுரேஷ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வழங்க வருகை தந்தனர். ஆனால் குற்றவாளியின் பெற்றோர்களை கைது செய்தால் மட்டுமே எந்த நிவாரணத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்து நிராகரித்து இரண்டாவது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களும் சஸ்பெண்ட்..

ஐடி ஊழியர் கவின்குமாரின் ஆணவக் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சுர்ஜித்தின் பெற்றோரான, சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி இருவரும் அவர்களுடைய சப்-இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கவினின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து சுர்ஜித்தின் பெற்றோரை கைதுசெய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்திவருகின்றனர். கவினின் மாமா சஸ்பெண்டான சப்-இன்ஸ்பெக்டர்களை கைதுசெய்யக்கோரி பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

NellaiCase

மேலும் வழக்கில் ஆதாரத்தை கூட்டும் வகையில் கவின் சம்பந்தப்பட்ட பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது உறவினர்கள் வெளியிட்டு, இதனையும் ஆதாரமாக வைத்து விசாரணை நடைபெறவேண்டும் என கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.