leo
leo  file image
தமிழ்நாடு

திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள்: சிசிடிவி காட்சியால் சிக்கிய பின் போலீசிடம் சொன்ன பகீர் காரணம்!

யுவபுருஷ்

கும்பகோணம் அருகே உள்ள பெருமாண்டி, கணபதி நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு செல்போன் கடைக்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியைடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கு முன் கடந்த 27ஆம் தேதி அதே பகுதியில் மற்றொரு வீட்டிலும் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்து 6 ஆயிரம் ரொக்கம், ஐந்து கிராம் தங்க நாணயம் உள்ளிட்டவைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இந்த இரு வழக்கு தொடர்பாக விசாரணையை தொடங்கிய போலிசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆய்வில், தெரவை நோட்டமிட்டபடி வந்த இரு சிறுவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத போது வீட்டின் சுவர் ஏறி குதித்து திருடி செல்வது பதிவாகியிருந்தது.

இதனைத்தொடர்ந்து சிறுவர்களின் முகத்தை அடையாளம் கண்ட போலிசார், இருவரையும் கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லியோ படம் பார்ப்பதற்காகவும், தீபாவளிக்கு புத்தாடை மற்றும் வெடி வாங்குவதற்காகவும் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

தொடர்ந்து, திருடப்பட்ட பணம் மற்றும் நகைகளை மீட்ட போலீசார், இருவரையும் எச்சரித்து விடுவித்தனர். லியோ படம் பார்ப்பதற்காக சிறுவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.