திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருமபத்து பகுதியில், நேற்று இரவு வந்த 9 பேர் கொண்ட கும்பல் அங்குள்ள டீ கடை ஒன்றின் மீது திடீரென பெட்ரோல் குண்டை வீசியுள்ளது. குண்டு வெடித்து சிதறியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது அந்தக் கும்பல் பொதுமக்களை விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அவர்கள் கண்மூடித்தனமாக வெட்டியதில் இரண்டு பேர் ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் 7 பேர் வெட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் இதுவரை 7 பேரை காவல்துறை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களில் இருவர் கடந்த 2023-ஆம் ஆண்டு நாங்குநேரி பெருந்தெருவில் வசித்து வந்த பள்ளி மாணவன் சின்னதுரை மற்றும் அவரது தங்கை மீது கொடூரமான முறையில் சாதிய வன்மத்துடன் தாக்குதல் நடத்திய வழக்கில் சம்பத்தப்பட்டவர்கள் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த சுபாஷ் (19) மற்றும் கல்யாணி (19) ஆகிய இருவர் இந்த தாக்குதல் வழக்கில் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சின்னதுரை வழக்கில் பிணையில் வந்த பிறகு, ஒரு பெண்ணை அவரது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் இவர்கள் மீது இரண்டாவது ஒரு புகார் எழுந்திருந்தது.
இந்தச் சூழலில்தான், நாங்குநேரி பெருமாத்துவில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் தற்போது 3-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு, மாணவன் சின்னதுரை வழக்கில் தொடர்புடைய இருவர் அடுத்தடுத்த குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வரும் நிலையில், இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.