விஜய் web
தமிழ்நாடு

பெரும்பான்மையின்றி தவிக்கும் தவெக.. தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமைகிறதா..?

தவெக ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்களே தேவையாக இருந்துவரும் சூழலில் விசிக மௌனம் காத்துவருகிறது. இந்தசூழலில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Rishan Vengai

1967க்கு பிறகு முதன்முறையாக திமுக, அதிமுகக்கு அப்பால் மூன்றாவது சக்தியாக தவெக உருவாகி, 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. ஆனால் பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு வழங்கியும் 116 இடங்களுடன் நிற்கும் தவெக, விசிக ஆதரவை எதிர்நோக்கி உள்ளது. விசிக ஆட்சிப் பங்கு கோரிக்கையால் குழப்பம் நீடிக்க, ஆதரவு வராவிட்டால் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமையலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

தமிழக அரசியலை பொறுத்தவரை இருபெரும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையேயான இருமுனைப் போட்டியே இருந்துவந்த நிலையில், நடிகர் விஜயின் வருகையால் இந்த முறை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலை தமிழகம் கண்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டிய தவெக 35% சதவீதம் வாக்குசதவீதத்தை பதிவுசெய்து 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக வரலாறு படைத்தது. 1967-க்கு பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சி அல்லாமல் 3வதாக ஒரு கட்சி தனிம்பெரும்பான்மை பெருவது இதுவே முதல்முறை.

தமிழ்நாட்டின் முதல்வராகிறார் ஜோசப் விஜய்

108 இடங்களில் வென்றபோதும் தவெகவிற்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அவர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரினர்.

இந்தசூழலில் காங்கிரஸ், இடதுசாரிகள் தங்களுடைய ஆதரவை தவெகவிற்கு வழங்கிய நிலையில், 116 சீட்களுடன் பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்களை தேடிவருகிறது தமிழக வெற்றிக் கழகம். இந்நிலையில் தான் மீதமிருக்கும் 2 இடங்களுக்காக விசிக என்ன சொல்லப்போகிறது என தமிழகமே எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது.

விசிகவை பொறுத்தவரையில் நேற்று அவர்களுடைய உயர்நிலைக்குழு கூட்டம் இணையவழியாக நடைபெற்றபிறகு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை விசிக தலைவர்கள் வைத்துவருகின்றனர். ஆனால் விசிக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராமல் இருக்கிறது.

இந்தசூழலில் தான் நாளைக்கும் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் இருப்பதால், ஒருவேளை விசிக கடைசிவரை வரவில்லை என்றால் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமையவிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று விசிக தலைவர் திருமா முக்கிய அறிவிப்பை வெளிப்படுத்துவாரா அல்லது தமிழகம் ஆளுநர் ஆட்சியை நோக்கி நகருமா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.