தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவை ஒதுக்கி விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க தேவையான 118 எண்ணிக்கைக்கு குறைவாக இருந்த நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்து ஆதரவு வழங்கியதால் தவெக கூட்டணிக்கு 120 இடங்கள் கிடைத்து, விஜய் முதல்வராக பொறுப்பேற்கும் நிலை உருவானது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு காணாத ஒரு மும்முனைப் போட்டியை கண்டது. தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்துவந்த திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டிய விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வென்று வரலாறு படைத்தது. அதிக இடங்களில் வெற்றிபெற்று தமிழ்நாட்டின் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் பற்றாக்குறையாக இருந்தது.
இந்தசூழலில் தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் அடங்கிய 3 கட்சிக்கும் ஆதரவு தருமாறு விஜய் கடிதம் எழுதியிருந்தார். இதில் 5 தொகுதிகளை வைத்திருக்கும் காங்கிரஸ் முதல் ஆளாக ஆதரவளிப்பதாகவும், அடுத்த தேர்தலில் சேர்ந்து பயணிப்பதாகவும் அறிவித்தது.
112 இடங்கள் இருந்தாலும் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்காமல் விஜயை பதவியேற்க அழைக்கமுடியாது என்று திட்டவட்டம் காட்டிய நிலையில், இன்று இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய ஆதரவை உறுதிசெய்துள்ளன.
இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர்களான வீரபாண்டியன் மற்றும் பெ. சண்முகம் இருவரும் கூட்டாக தவெகவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காகவும், கொல்லைப்புறமாக பாஜக ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த முடிவை எடுப்பதாகவும், தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தாலும் திமுகவுடனே சேர்ந்து பயணிப்போம் என்றும் தெரிவித்தனர். மேலும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறோம் என்றும், அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் விசிக தலைவர் செய்தியாளர் சந்திப்பில் இடம்பெறாத நிலையில், தங்களுடைய நிலைப்பாட்டையே திருமாவளவனும் எடுத்துள்ளார் என்று வீரபாண்டியன் தெரிவித்தார். ஆனால் விசிகவின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததால் திருமாவளவனால் பங்கேற்க முடியவில்லை என்று சொல்லப்பட்டது.
இந்தசூழலில் தான் விசிக மாற்றுமுடிவை எடுக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், விசிகவும் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவிப்பதாகவும் முன்னர் அறிவிப்பு வெளியானது. ஆனால் இதுவரை இரண்டு கட்சிகளும் தங்களுடைய ஆதரவு கடிதத்தை கொடுக்காத நிலையில், முதல்வராகும் விஜயின் தாமதம் அவர்களுடைய கடிதத்திற்காக காத்திருக்கிறது.