தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பல கருத்துக் கணிப்புகளை தவிடு பொடியாக்கி முதன்முறையாக தேர்தலை சந்தித்த விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. 73 தொகுதிகளில் மட்டுமே பெற்று திமுக கூட்டணி இரண்டாவது இடத்திற்கும், 53 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று அதிமுக மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டன. தவெகவின் இந்த வெற்றியின் மூலம், 1977க்குப் பிறகு, அதிமுக அல்லது திமுக என மாறிமாறி தமிழகத்தை ஆட்சியைப் பிடித்து வந்த நிலையில், அதன் தொடர்ச்சிக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக பார்க்கப்பட்டது.
அதேசமயம், தவெக தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்க பெரும்பான்மையான 118 என்ற எண்ணிக்கை கிடைக்காத நிலையில் தான், மற்றக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனையடுத்து, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய திமுக கூட்டணி கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியிருந்தது. அதேசமயம், கொள்கை அடிப்படையில் என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்கப்படவில்லை என தவெக தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணி இணைந்தது. இதன்மூலம், தவெக ஆதரவு எண்ணிக்கை 112-ஆக உயர்ந்தது. இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து “தனிப்பெரும்பான்மை” கட்சியாக தாங்கள் இருப்பதால், தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோரினார். விஜய் ஆளுநரை 3 முறை சந்தித்த நிலையில், ஆளுநரின் பதில் பெரும்பான்மையை காட்டிய பிறகே, ஆட்சி அமைக்க அழைக்கப்படுவீர்கள் என்பதாகவே இருந்து.
இதற்கிடையில், அதிமுக திமுக கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதற்கு வலுசேர்க்கு விதமாக, புதுச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டமும், திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் சென்னையிலும் ஒரே நாளில் நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில், மே-10 ஆம் தேதி வரை திமுக எம்.எல்.ஏ-க்கள் சென்னையிலேயே இருக்க அக்கட்சி தலைமையால் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்தசூழலில், விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் ஆதரவு தருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில், தங்களது முடிவை நேற்று அறிவிப்போம் எனத் தெரிவித்திருந்தனர். இடதுசாரிகளின் முடிவைப்போலவே தங்களது நிலைப்பாடும் இருக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், இடதுசாரிகள் கட்சிகள், தவெகவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாகவும், அதேசமயம் திமுக கூட்டணியிலேயே தொடருவாதகவும் தெரிவித்தன. இதன்மூலம், தவெக ஆதரவு எண்ணிக்கை 116-ஆக உயர்ந்திருக்கிறது. எனினும், திமுக கூட்டணியில் இருந்து கொண்டு தவெகவுக்கு எப்படி ஆதரவு அளிக்கும் முடியும் என இடதுசாரிகள் மீது பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேசமயம், தவெக ஆட்சி அமைக்க 2 இடங்களே தேவைப்படும் நிலையில், நேற்று தனது முடிவை அறிவிப்பதாக இருந்த திருமாவளவன், இடதுசாரிகள் முடிவை அறிவித்து தனது முடிவை அறிவிக்காமல் இருந்ததும், நேற்று இரவு திமுக தலைவர் ஸ்டாலினை திருமாவளவனை ஸ்டாலின் சந்தித்துப் பேசியிருந்ததும் பேசுபொருளாகியிருந்தது. விசிக என்ன முடிவை எடுக்கப்போகிறது என்பதை நாடே உற்றுநோக்கி வரும் நிலையில், இன்று காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், 11 மணிக்கு அறிவிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தசூழலில் தான், இன்று மாலை 4 மணிக்கு விசிக தலைவர் திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவா? இல்லையா? என்ற முடிவை அறிவிப்பார் என அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தசூழலில் தான், தற்போது தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரிடன் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் அளித்திருக்கிறார். இதன்மூலம், தவெகவுக்கு தேவையான 118 என்ற பெரும்பான்மை இடங்கள் கிடைத்திருக்கின்றன. இதன்மூலம், தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல்வராகிறார் தவெக தலைவர் விஜய். திருமாவளவனிடம் அதரவு கடித்தத்தைப் பெற்ற ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம் பேசிகையில், ஜனநாயகம் காக்கப்படும்; மக்கள் ஆதரவுடன் விஜய் முதல்வராவார். ஆதரவு தந்த இரு கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆசான் திருமாவளவனுக்கு நன்றி எனத் தெரிவித்திருக்கிறார். இந்த சூழலில் தான், இன்று 4-வது முறையாக ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரவிருக்கிறார்.